Wednesday, July 28, 2010

பெருமானார்(ஸல்)அவர்களின் பரவசம்.




பெருமானார்(ஸல்)அவர்கள் ஸஹாபாக்களில் ஒரு பிரிவினரை போருக்காக தேர்ந்தெடுத்து ,அவர்களில் ஒவ்வொருவருக்கும் தேவையான உணவுப்பொருட்களையும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவ்வீரர்களில் ஒருவரான ஹுதைபா(ரலி)அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்க விடுபட்டுப்போய் விட்டது.படை புறப்பட்டுப்போய் விட்டது.

ஹஜ்ரத் ஜிப்ரீல்(அலை) அவர்கள் பெருமானார்(ஸல்)அவர்கள் முன் தோன்றி "நபியே!திண்ணமாக என் ஹக்கன் என்னை தங்களிடம் அனுப்பி உள்ளான்.உங்களது தோழரகள் அனைவருக்கும் உணவுப்பொருட்கள் கொடுத்தனுப்பிய தாங்கள் ஹுதைருக்கு மட்டும் கொடுக்க மறந்து விட்டீர்கள்.அவர் "ஆகாரங்களில் சிறந்தது யாரப்பி"என்று சொல்லிய வண்ணம் சென்று கொண்டிருக்கின்றார்.மறுமை நாளில் ஹுதைரின் இம்மொழி விண்ணுக்கும் ,மண்ணுக்கும் இடையே பேரொளியாக விளங்கப்போகின்றது.யாரிடமேனும் ஹுதைருக்கு உணவுப்பொருட்களைக்கொடுத்தனுப்பும்படி அல்லாஹ் கூறினான்"என்றனர்.

பெருமானார்(ஸல்)அவர்கள் ஒரு தோழரை அழைத்து ஹுதைருக்கு தேவையான உணவைக்கொடுத்து"ஹுதைரைக்கண்டு இவ்வுணவைக்கொடுத்ததும் ,ரசூலுல்லாஹ் தங்களுக்கு ஸலாம் சொன்னார்கள்.மேலும் உங்களுக்கு உணவுப்பொருளைத்தர மறந்து விட்டார்கள்..திண்ணமாக என் இறைவன் என்னிடம் உங்களைப்பற்றி நினைவூட்ட ஜிப்ரீல்(அலை)அவர்களை அனுப்பி வைத்தான்.அவர் உங்களைப்பற்றி நினைவூட்டியதுடன்,உங்கள் இருப்பிடத்தையும் அறிவித்தார் என்று நான் கூறியதாக கூறுங்கள்"என்று சொல்லி தோழரை ஹுதைரின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

ஹுதைர் சென்ற பாதை நோக்கி விரைந்த அந்தத்தோழர் ஹுதைரை நெருங்கி மேற்கூறியவாறு உரைத்தனர்.இதனைக்கேட்ட ஹுதைர் அல்லாஹ்வைப்புகழ்ந்து,பெருமானார்(ஸல்)அவர்கள் மீது சலவாத்து சொல்லி அகம் மகிழ்ந்தார்.

"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.ஏழு வானங்களுக்கு அப்பாலிருக்கும் அர்ஷுக்கு மேலிருந்தவாறு என்னை என் ஹக்கன் நினைவு கூர்ந்துள்ளான்.என் பசியையும்,சோர்வையும் கண்டு மனமிறங்கிஉள்ளான்.யாரப்பே!ஹுதைரை நீ மறக்காதது போன்று ஹுதைரையும் உன்னை என்றென்றும் மறக்காமல் இருக்கும் இருக்கும்படி செய்வாயாக!"என்று ஹுதைர் இரு கையேந்தி துஆ கேட்டனர்.

இவ்விபரத்தை அத்தோழர் பெருமானார்(ஸல்)அவர்களிடம் சொன்னதும்,பெருமானார் அவர்கள்"ஹுதைர் அவ்வாறு கூறிய தருணத்தில் மட்டும் நீர் வானத்தை பார்த்திருப்பீராயின் அவரது இச்சொல்லுக்காக பூமிக்கும் வானத்திற்கும் இடையே ஒரு பேரொளியைக்கண்டிருப்பீர்"என்று பரவசத்துடன் கூறினார்கள்.

ஆதாரம்:அல் கஸ்ஸுல் இஸ்லாமி
அறிவிப்பாளர்:அப்துல்லாஹ் பின் உமர்

மஹர்


‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4)

‘நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை…நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்..’ (அல்குர்ஆன் 33:50)

‘பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் – அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும். இது நல்லோர் மீது கடமையாகும்.’ (அல்குர்ஆன் 2:236)

‘..அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்…’ (அல்குர்ஆன் 4:24)

ஒரு தடவை நபி(ஸல்) அவர்களிடம் வந்து ஒரு இளைஞர் "நான் மணம் செய்யப்போகின்றேன்.ஆனால் என்னிடம் மஹராக கொடுக்க எதுவுமே இல்லை.நான் அணிந்திருக்கும் இந்த ஒரே ஒரு வேட்டியத்தவிர.அதனால் இந்த வேட்டியை கிழித்து ஒரு பகுதியை என் மனைவிக்கு மஹராக கொடுக்கவா" என்றார்.

இதனைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள் "வேண்டாம் கிழித்தீர்களானால் இருவருமே உபயோகிக்கமுடியாததாகி விடும்.நான் ஒன்று சொல்கின்றேன்.உமக்கு குர் ஆன் ஷரீபில் எந்த சூராவாவது மனனம் செய்துவைத்திருக்கின்றீரா?"என்று கேட்டதும் அவ்விளைஞர் "ஆம்" என்றார்.

உடனே நபி (ஸல்)அவர்கள் "சரி நீர் மனனம் செய்த சூராக்களை உமது மனைவிக்கும் கற்றுக்கொடும்.நீர்கற்றுக்கொடுத்து, கற்றுக்கொடுத்ததை மஹராக்கிக்கொள்ளும் "என்று கூறி அனுப்பிவைத்தார்கள்.

ஆதித்தந்தை ஆதம்(அலை)அவர்கள் அளித்த மஹர்:

ஆதம் அலை அவர்களில் இருந்தே ஹவ்வா அலை அவர்களை சிருஷ்டித்த இறைவன் அமரர்கள் (வானவர்கள்) சாட்சியாக ஆதம்(அலை) அவர்களுக்கும்,ஹவ்வா (அலை )அவர்களுக்கும் மணம் செய்துவைத்தான்.அவ்விழாவில் திருமணப்பேருரை நிகழ்த்தியதும் இறைவனே.மணம் முடித்த பின் ஆதம் (அலை) அவர்கள் தன் மனைவியின் அருகே நெருங்கிய பொழுது அமரர்கள் அவர்களை தடுத்து விட்டனர்.மனைவிக்கான மஹரை கொடுக்காதவரை மனைவியை நெருங்க கூடாது என்ற இறைக்கட்டளையை நினைவூட்டீனர்.

"மஹர் என்றால் என்ன?" என்று வினவியபொழுது

"திருமணத்தின் போது கணவன் மனைவிக்கு கொடுக்கக்கூடிய தொகை"என்று வானவர்கள் விளக்கம் பகர்ந்தனர்.

"அவ்வாராயின் நான் என் மனைவிக்கு என்ன கொடுக்கவேண்டும்"என்று வினவினர் ஆதம் அலை அவர்கள்.

"உமது வழிவழிப்பேரராகிய முஹம்மது(ஸல்)அவர்கள் மீது மும்முறை ஸலவாத்து சொல்லும்"என்று வானவர்கள் கூறினர்.

அதன் படியே நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்லி,அதனையே தன் மனைவிக்கு மஹராக கொடுத்தனர் ஆதித்தந்தை அவர்கள்

Saturday, July 24, 2010

அறம் என்னும் அற்புதம்


புரவி மீது இவர்ந்து வந்து யாசிப்போருக்கும் தானம் அளியுங்கள்.
அ:அதிபிப்னு ஹாதிம்
ஆ:புகாரி,முஸ்லிம் நஸாயீ

தம்முடைய அவசியத்தேவைகளில் இருந்து மீதமுள்ளதை தர்மம் செய்வதும்,தன் குடும்பத்தாரில் இருந்து தர்மம் செய்யத்துவங்குவதும் மேலான தர்மம் ஆகும்.
அ:அபூ ஹுரைரா
ஆ:புகாரி,அபூதாவுத்,நஸாயீ

தர்மம் செய்தவர் தன் செய்த தர்மத்தை திரும்ப பெறுவாராயின் வாந்தி எடுத்ததை மீண்டும் உண்பதற்கு நிகராவார்.
அ:உமர் (ரலி)
ஆ:புகாரி,முஸ்லிம் நஸாயீ,முஅத்தா,திர்மிதி

அறம் செய்தல் இறைவனது சினத்தை தணிய வைத்து தீய இறப்பை விட்டும் மனிதனை காக்கின்றது.
அ:அபூ ஹுரைரா
ஆ:திர்மிதி

"ஒரு லட்சம் பொன் நாணயத்தை விட ஒரே ஒரு பொன் நாணயம் உயர்வானதாகி விட்டது"நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன பொழுது "நாயகமே!அது எங்ஙனம் "என்று வினவப்பட்டது.

"ஒரு மனிதரிடம் இரண்டே பொன் நாணயங்கள் இருந்தன.அவற்றில் இருந்து நல்லவற்றை தேர்ந்தெடுத்து தானம் செய்து விட்டார்.மற்றொரு செல்வந்தர் தன் கருவூலத்தில் இருந்து ஒரு லட்சம் பொன் நாணயங்களை எடுத்து தானம் செய்து விட்டார்.முந்தியவர் தானம் செய்த நல்ல ஒரு பொன் நாணயம் ,பிந்தியவருடைய ஒரு லட்சம் பொன் நாணயத்தை விட சிறந்ததாகி விட்டது.ஏனெனில் முன்னவர் தன் பொருளில் இருந்து பாதியில் நல்லவற்றை அளித்தார்.பின்னவர் தன் கருவூலத்தில் இருந்து ஒரு சிறு பாகத்தினை அளித்தார்"என மறு மொழி பகர்ந்தார்கள்.
அ:அபூ ஹுரைரா
ஆ:திர்மிதி

Friday, July 9, 2010

மிஃராஜ்

தன் அடியாரை சங்கைமிகு பள்ளியிலிருந்து ,(வெகு தொலைவான)அக்ஸா பள்ளிவாசலின் பால்,ஒரு இரவில் இரவுப்பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிக பரிசுத்தமானவன்.(மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய)அது எத்தகையது என்றால்நாம் அதை சுற்றிஉள்ள பகுதியை அபிவிருத்தியடைய செய்து இருகின்றோம்.நம்முடைய அத்தாட்சிகளைஅவருக்கு நாம் காண்பிப்பதற்காக (அழைத்துச்சென்றோம்)நிச்சயாமாக அவனே அனைத்தையும் செவியுறுபவானாகவும்,பார்ப்போனாகவும் இருகின்றான்.
அல்குர் ஆன் - 17:1

கஹ்பாவின் தாழ்வாரத்தில் ஹதீம் அல்லது ஹஜ்ரு என்னும் இடத்தில் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருக்களித்து சாய்ந்து படுத்திருக்கும் நிலையில்,தூக்கத்திற்கும்,விழிப்பிற்கும் இடையே உள்ள நிலையில் நாயகம் (ஸல்)அவர்கள் இருந்த பொழுது ஜிப்ரீல் (அலை)
அவர்களால் அல்லாஹ்வின் ஆணைப்படி விண்ணுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள்.

கோவேருக்கழுதைக்கு சற்றுத்தாழ்வாகவும்,கழுதைக்கு சற்று உயரமாகவும் ஒரு வெண்மை நிறத்திலான உயிர் பிராணி (புராக்) பெருமானார் முன் கொண்டுவரப்பட்டது.அதன் வேகம் எத்தகையது என்றால் அது தன் பார்வை செல்லும் தூரத்திற்கு ஒரு அடி வைத்து தாண்டி விடும் ஆற்றலுடையது.அதில் பெருமானார்(ஸல்) அவர்கள் அமரவைக்கப்பட்டு ஜிப்ரீல் (அலை) அவர்களால் விண்ணுலகிற்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள்.

1 வது வானத்தில் ஆதம் (அலை)அவர்களும்
2 வது வானத்தில் யஹ்யா(அலை)
3 வது வானத்தில் யூஸுஃப் (அலை)அவர்களும்
4 வது வானத்தில் இத்ரீஸ் (அலை)அவர்களும்
5 வது வானத்தில் ஹாரூன் (அலை)அவர்களும
6 வது வானத்தில் மூஸா (அலை)அவர்களும்
7 வது வானத்தில் இப்றாஹீம்(அலை)அவர்களும் இருந்தார்கள்.

வானலோகத்தில் ஒவ்வொரு அடுக்கிலும் இருந்த நபிமார்களை ஹாத்தமுன் நபிய்யீன்(ஸல்)அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை)அவர்கள்தாம் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். நபிமார்களை சந்தித்து நல்லாசி பெற்றார்கள்.

ஆறாவது வானத்தில் இருந்த மூஸா (அலை) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களைக்கண்டு அழுதனர்.காரணம் கேட்டபொழுது" நிச்சயமாக எனக்குப்பின் நபியாக அனுப்பப்பட்ட ஓர் இளைஞருடைய சமூகத்தினர்,என் சமூகத்தினரை விட அதிகளவு சுவனபதி செல்வார்கள் என்று எண்ணி அழுகின்றேன்"என்றார்கள்.

திட்டமாக மற்றொரு முறை இறங்குகையில் அவரை(ஜிப்ரீலை) அவரது சுய உருவில் கண்டனர்.அல்குர் ஆன் 3:13

"ஸித்ரத்துல் முண்தஹா"என்னும் (இலந்தை) மரத்தின் எல்லையில் இக்காட்சி நிகழ்ந்தது.அல்குர் ஆன் 3:14

அவ்விடத்தில்தான் நல்லடியார்கள் தங்கும் சுவர்க்கம் இருக்கின்றது.அல்குர் ஆன் 3:15

பின்னர் ஸித்ரத்துல் முண்தஹா என்னும் சுவனபதிக்கு மேல்கோடியிலுள்ள ஒரு இலந்தைமர நிழலுக்கு அழைத்து வரப்பட்ட நபி(ஸல்)அவர்கள் அம்மரத்தை நோக்கினார்கள்.அதன் பழம் குடம் போலும்,இலைகள் யானையின் காது போன்றும் தோற்றம் அளித்தது.அந்த மரத்தின் அடிப்பாகத்தில் இருந்து நாண்கு ஆறுகள் ஒலித்தோடிக்கொண்டிருந்தன.அவற்றில் இரண்டு வெளிப்புறத்திலும்,இரண்டு மறைவாகவும் இருந்தன.

அதனை கண்ணுற்ற நபி(ஸல்)அவர்கள் ஜிப்ரீல்(அலை)அவர்களிடம் "இவை இரண்டும் என்ன?"என்று கேட்டனர்.
"மறைவாக உள்ள இரண்டும் சுவனபதியில் உள்ளவைகளாகும்.வெளிப்புறமாக உள்ள மற்ற இரண்டும்நைல் நதியும்,புராத் நதியுமாகும்"என்று ஜிப்ரீல் (அலை)அவர்கள் பதிலுறுத்தனர்.

பிறகு பைத்துல் மஃமூர்(வானவரின் பள்ளி)க்கு அழைத்துச்சென்று நபி(ஸல்)அவர்களுக்கு பால் வழங்கப்பட்டது.

பிறகு ஆறாவது வானத்திற்கு வந்துகொண்டிருந்த பொழுதுமூஸா (அலை )அவர்கள் "என்ன கட்டளை பெற்றீர்கள்?"என்று கேட்டார்கள்.
"50 வேளை தொழுகை செய்யும் படி கட்டளை பெற்றேன்"
"நிச்சயமாக உங்களது சமூகத்தினர் இதனை ஆற்றுவதற்கு ஆற்றலற்றவர்கள்.இறைவன் ஆணையாக நான் உங்களுக்கு முன் மக்களை சோதித்துப்பார்த்தேன்.எனவே மீண்டும் இறைவனிடம் சென்று தொழுகையை இன்னும் இலகுவாக்கும் படி கோருங்கள்" என்றனர்.

இவ்விதமாக ஐவேளை தொழுகையைக் கட்டளையிடப்படும் வரை நபி(ஸல்)அவர்கள் இறைவனுக்கும் மூஸா(அலை)அவர்களுக்கும் இடையில் போய் வந்து கொண்டிருந்தார்கள்.

இருப்பினும் மூஸா (அலை) அவர்கள் "உங்களுடைய சமூகத்தினர் ஐவேளைத்தொழுகையைக்கூட தொழ ஆற்றல் பெற்று இருக்க மாட்டார்கள்.எனவே மீண்டும் இறைவனிடம் சென்று தொழுகையை மேலும் இலகுவாக்கும் படி கோருங்கள்"என்றார்கள்.

அதற்கு நபி(ஸல்)அவர்கள் "நிச்சயமாக நான் என் இறைவனிடம் வெட்கமுறும் வரை கேட்டு விட்டேன்.இப்பொழுது அந்த கட்டளைக்கு இணங்கி விட்டேன்.அதனை ஏற்றுக்கொண்டு விட்டேன்."என்றனர்.

அறிவித்தவர்கள்:அனஸ்,மாலிக்(ரலியல்லாஹு அன்ஹுன்ன
ஆதாரம்:புகாரி,முஸ்லிம்,நஸாயீ.திர்மிதி

நபியே!சூரியன் (உச்சியை விட்டு)சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (யுள்ள லுஹர்,அஸர்,ம்ஃரிப்,இஷா ஆகிய)தொழுகைகளை நிலை நிறுத்துவீராக!மேலு,பஜ்ரு தொழுகையையும் தொழுது வாரும்.நிச்சயமாக பஜ்ருடைய தொழுகையானது (வானவர்கள் வருகைக்குறியதாகும்)அல்குர் ஆன்-17:78 -

Wednesday, July 7, 2010

சிரிப்பு எத்தனை வகை



ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன்
ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி
இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
மகிமையில் சிரிப்பவன் மன்னன்

தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி
தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
நிலை கண்டு சிரிப்பவன் காரியவாதி

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும் பொழுது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்
வெற்றியில் சிரிப்பவன் வீரன்

விளையாமல் சிரிப்பவன் வீணன்
தற்பெருமையால் சிரிப்பவன் கோழை

அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி
அன்பால் சிரிப்பவள் அன்னை

காதலால் சிரிப்பவள் மனைவி
நிலை மறந்து சிரிப்பவள் காதலி

நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்
நினைவோடு சிரிப்பவன் அறிவாளி

குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி
கும்மி அடித்து சிரிப்பவன் இதய கசடுள்ளவன்

அகம் மகிழ்ந்து சிரிப்பவன் உண்மை நண்பன்
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.

படித்ததில் பதிந்தவை

அறத்தின் மகத்துவம்


பிர்அவுனைபற்றி குர் ஆனிலும்,ஹதீஸ்களிலும்,வரலாறுகளிலும் நிறைய அறிந்திருப்போம்.
பிர்அவுன் - மூஸா (அலை) அவர்களுக்கு வழிப்படாமல்,தன்னையே இறைவன் என்று கூறிய கொடியவன்.இறைவனுக்கு முற்றிலும் மாறுபட்டவன்."அல்லாஹ் ஒருவனே" என்று அந்த அர்ஷுக்குரியவனை வழிப்பட்ட மூஸா (அலை)அவர்களை பின்பற்றிய மக்களை துன்புறுத்தி கொடுமை செய்தவன்.அவனது சொல்லொண்ணா தொல்லைகளை கண்ட மூஸா (அலை)அவர்கள் இறைவனிடன் பிர் அவுனை அழித்து விடுமாறு மன்றாட்டம் செய்தார்கள்.

இறைத்தூதர்களான நபிமார்களின் பிரார்த்தனை உடனே அங்கீகரிக்கப்பட்டுவிடும் அல்லாஹ்விடத்தில்.அப்படி இருந்தும் பிர் அவுன் அழிக்கப்படாமல் மூஸா(அலை) அவர்களின் து ஆ கபூல் செய்யப்படாமல் இருந்து வந்தது.தொடர்ந்து பிர் அவுனின் தொல்லைகள் அதிகரிக்கத்தான் செய்தது.

இதனைக்கண்ட நபியவர்கள்"இறைவா!நபிமார்களின் பிரார்த்தனையை உடனே நிறைவேற்றுவதாக வாக்களித்து இருந்தாயே!ஆனால் பிர் அவுன் அழிக்கப்படாமல் இருக்கின்றானே?"என இறைவனிடம் வினவினார்கள்.

அதற்கு வல்ல இறைவன்"ஓ..மூஸாவே..நான் அவ்விதம் வாக்களித்திருப்பது உண்மைதான்.பிர் அவுன் இத்தனை அநியாயக்காரனாக இருந்தாலும் ஒரு சில நற்கிரியைகள் செய்து வருகின்றான்.அதனால் அவன் அழிக்கப்படாமல் தாமதப்படுத்தபட்டுள்ளான்"என்றுரைத்தான்.

"பிர் அவுன் இடத்திலுமா நற்கிரியைகள் நிகழ்கின்றன?" மூஸா (அலை)அவர்கள் திகைப்புடன் வினவ

"ஓ..மூஸாவே!அவன் அரசாட்சியில் ஏழைகளுக்கு மடங்கள் கட்டி உள்ளான்.அவனது ஆட்சியில் பசித்தோருக்கு அன்னதானம் வழங்கி உள்ளான்.வறியோர்கள் வயிறார உண்ட பின் அவனை அகம் குளிர வாழ்த்திவிட்டுஅவனுக்காக என்னிடம் பிரார்தனை செய்கின்றனர்"என இறைவன் கூறினான்.

பிர் அவுன் இந்த தர்மங்களை மக்கள் தன்னை ஏற்றிப்போற்றி,புகழவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே செய்து வந்தான்.இருப்பினும் அவனது இந்த தர்ம செயல்களால் ஏழை எளியவர்கள் நிறைவு பெறுகின்றனர் என்ற ஒரே காரணத்தினால் அவன் அழிக்கப்படாமல் தாமதப்படுத்தபட்டுள்ளான்.

பிர் அவுன் எப்படிப்பட்ட கொடூரன்.இருப்பினும் அவன் செய்த தர்மம் ,தர்மத்தின் தலைவனான அல்லாஹ்வையே அவன் மீது நோக்கச் செய்து விட்டது
என்றால் அந்த தர்மத்தின் மகத்துவம்,சக்தியை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

பிர் அவுன் தர்மச்செயல் புரிந்ததால் இறைவனின் அன்பை எட்டி விட இயலாதுதான்.பிர் அவுன் எப்பொழுது தானே இறைவன் என்று மமதை கொண்டு ஆடினானோ அக்கணமே இறைவனால் சபிக்கப்பட்டவன் ஆகிவிட்டான்.என்றாலும் தர்மத்தின் தன்மையானது இறைவனை மிகவுமே கவர்ந்து விடுகின்றது என்ற காரணத்தினாலேயேதான் பிர் அவுன் அழிவை விட்டும் சிறிது தாமதபடுத்தபட்டான்

தர்மத்தின் சக்தி எத்தனை வல்லமையானது.அல்ஹம்துலில்லாஹ்!

Tuesday, July 6, 2010

வாழ்க்கைக் கணக்கு


நல்லவற்றைக் கூட்டிகொள்+

தீயவற்றை கழித்துக்கொள் -

அறிவைப்பெருக்கிக்கொள் *

நேரத்தை வகுத்துக்கொள் /

வளர் பிறை போல் அறிவை வளர் <

செலவைக்குறை அறிவைப் பெருக்கு >

அன்பை பெருக்கு ஆணவத்தைக்குறை

நல்லவர்களுடன் இணையாய் இரு

பிறரை நம்பி வாழும் வாழ்வு சுகமற்றது

வீண் சந்தேகம் தவிர் ?

கெட்ட நண்பர்களுக்கு முற்றுப்புள்ளி வை .

நல்ல பெயரை சேர்த்துக்கொள் @

அனைவருக்கும் வினோதம் ஆகி விடாதே !

நற் செயலுக்கு கமா போடு ,

அஷ்ரத்துல் முபஷ்ஷரா

அஷ்ரத்துல் முபஷ்ஷரா - சுவன நற்பேறு பெற்ற உத்தமர்கள் பத்துபேர்.அவர்கள்,

1.ஹஸ்ரத். அபூபக்கர்

2.ஹஸ்ரத். உமர்

3.ஹஸ்ரத். உதுமான்

4.ஹஸ்ரத். அலி

5.ஹஸ்ரத். தல்ஹா

6.ஹஸ்ரத். ஜுபைர்

7.ஹஸ்ரத். ஸைஈதிபுனு ஜுபைர்

8.ஹஸ்ரத். அத் பின் அபிவக்காஸ்

9.ஹஸ்ரத். அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்

10.ஹஸ்ரத். அபூ உபைதாபின் ஜர்ராஹ் - ரலியல்லாஹு அன்ஹுன்ன


வாழ்க்கை

1. வாழ்க்கை என்பது ஒரு குறிகோள்:அதை அடைய வேண்டும்.

2. வாழ்க்கை என்பது ஒரு வாக்கு:அதை நிறைவாக்க வேண்டும்.

3. வாழ்க்கை என்பது ஒரு பயணம்:அதை முடிக்க வேண்டும்.

4. வாழ்க்கை என்பது ஒரு கடமை:அதை நிறை வேற்ற வேண்டும்.

5. வாழ்க்கை என்பது ஒரு சவால்:அதை சந்திக்க வேண்டும்.

6. வாழ்க்கை என்பது ஒரு பாடல்:அதைப் பாட வேண்டும்.

7. வாழ்க்கை என்பது ஒரு கனவு:அதை நனவாக்க வேண்டும்.

8. வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு:அதை ரசிக்க வேண்டும்.

9. வாழ்க்கை என்பது ஒரு நீர் நிலை.அதை நீந்திச் செல்ல வேண்டும்.

10. வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம்:துணிவு,பொறுமை,தளராமனம் என்ற மூன்று கருவிகளுடன் போராட வேண்டும்.

Monday, July 5, 2010

ஜின்



குல் ஊஹிய இல்லாஹ் இன்னஹுஸ்தமஹ நப்ருன் மினல் ஜின்னி பகாலு இன்னா ஸமிஹ்னா குர் ஆனன் அஜப்!
(நபியே நீர் கூறுவீராக !எனக்கு வஹி அறிவிக்கப்பட்டது."நிச்சயமாக ஜின்களில் சில நபர்கள் இந்த குர் ஆனை செவியுற்றனர்;பிறகு தம் கூட்டாத்தாரிடம் சென்று நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமான ஒரு குர் ஆனை செவியுற்றோம்"என்று கூறினர்.
அல்குர் ஆன்- அ-72:வ1



ஜின்கள் என்றால் யார்?

ஜின்கள் என்றால் மனிதர்கள் போன்ற உடல் அமைப்பும்,தோற்றமும்,குடும்பம் கோத்திரம் என்று வாழும் ஒரு இனமாகும்.இவற்றின் தனிச்சிறப்பு மனிதர்களின் கண்களை விட்டும் மறைந்து வாழும் சக்தியுடையவை.இதனால் இவ்வினத்திற்கு ஜின் என்று பெயரிடப்பட்டது.ஜின் என்பதற்கு கண்ணுக்கு அப்பால் மறைந்திருப்பவை என்று பொருளாகும்.

ஷைத்தான்களுக்கும் ஜின் என்றே கூறப்படுகின்றது.ஆயினும் ஷைத்தான் பொது வார்த்தை அல்ல.ஜின்களிலேயே துஷ்டத்தனம் கொண்டவைகளையே ஷைத்தான் எனப்படுகின்றது.ஜின்களின் படைப்பின் அடிப்படை நெருப்பாகும்.மேலும் அவை விண்ணில் சஞ்சாரம் செய்யும் ஆற்றல் பெற்றவை.

ஜின் இனத்தினர் நபி (ஸல்)அவர்கள் பிறப்புக்கு முன் விண்ணில் சஞ்சரித்து,வானவர்கள் தங்களுக்குள்ளே இறைத்திட்டங்கள் குறித்து பேசுவதை மறைந்திருந்து திருட்டுத்தனமாக கேட்டு வருவது வழக்கம்.குறிப்பாக நபி (ஸல்)அவர்களின் பிறப்புக்கு பின் அவர்களது நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வானவர்களால் தடுக்கப்பட்டு விட்டது.எனவே பூமியில் ஏதோ ஒரு அதிசயம் நிகழ்ந்து இருக்க வேண்டும்மென்று யூகித்துக் கொண்ட ஜின்கள் ,அதனைக்கண்டறிய பூமியின் பல பாகங்களுக்கும் குழுக்களை அனுப்பினர்.

அப்பொழுதுதான் ஒரு குழு நபி (ஸல்) அவர்களைன் குர் ஆன் ஓதுதலைக்கேட்டு தாமும் இஸ்லாத்தை ஏற்று ,பிறரிடமும் அதனை சொல்லி விளக்கின.அப்போதே அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு ஜின்கள் குர் ஆன் ஓதுவதைப் பற்றி வஹி அறிவித்து மேற்கண்ட வசனத்தை அருளினான்.

ஆதாரம்:புகாரி,முஸ்லிம்,திர்மிதி

ஜின் இனத்தை அடக்குகின்ற பொறுப்பை அல்லாஹ் மலக்குகளிடமே ஒப்படைத்து இருந்தான்.ஆகவே 'மனித இனத்தை அடக்குகின்ற பொறுப்பும் நம்மிடத்திலேதான் வரும்' என்று மலக்குகள் எண்ணினர்.மனிதர்களை சரி செய்ய மனிதர்களே போதும் என்பதினை கீழ்கண்ட வசனத்தின் மூலம் அல்லாஹ் அருளினான்.

அதற்கு வானவர்கள்"நீ தூய்மையானவன்.நீ எங்களுக்கு கற்றுகொடுத்ததை அன்றிவேறு எங்களுக்கு இல்லை.வேறு எதனையும் நாங்கள் அறிய மாட்டோம்.திண்ணமாக நீயே அறிவு மிக்கவன்,ஞானம் நிறைந்தவன்" என்று கூறினர்.
அத்:2-வச:32

மனித ஆற்றலின் வலிமையை"மலக்குகளின் கல்வி,அறிவு,ஞானம்,ஒரு வரையயறைக்கு உட்பட்டது.ஆனால் மனிதனின் அறிவாற்றல் அப்படிப்பட்டதல்ல.பூமியில் இருந்தவாறே பிறகிரகங்களையும்,அதன் இயக்கங்களையும் அறிகின்றான்.மனிதனின் அறிவு ,ஆற்றல்,மற்ற படைப்பினங்களை விட அதிகம் என்பதினையும்,மலக்குகள்,ஜின்களிடம் இல்லாத முழுமையான ஆற்றலைத் தரப்பட்ட மனித இனமே உலகில் எனக்கு பிரதிநிதியாக இயங்கத் தகுதியானது"என்று அல்லாஹ் மலக்குகளிடம் விளக்கி உள்ளான்.

சகப்பதிவர் ஒருவர் நிஜமாக சொன்னாரா அல்லது அப்படியல்லாமல் சொன்னாரா என்பது தெரிய வில்லை.தான் தினமும் ஜின்னை பார்ப்பதாக,தஹஜ்ஜத் வேளைகளில் குர் ஆன் ஓதும் சப்தமும்,பேச்சு சப்தமும் கேட்டு பக்கத்தில்போய் பார்த்தால் ஒன்றுமே இருக்காது.அது ஜின் தான் என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன் செல் போன் மூலம் பறிமாறப்பட்ட ஒரு வீடியோ காட்சி அது .அது புனைப் படுத்தியதாக இருந்தாலும் எப்படி என்னுள் திகிலை ஏற்படுத்தியதோ ,அதே போல் சக பதிவரின் ஜின் பற்றிய உரையாடலும் எனக்கு திகிலை ஏற்படுத்தி விட்டது.குர் ஆனை விரிவாக அலசிய போது நான் அறிந்தவற்றை பகிர்ந்திருகின்றேன்.உங்கள் அபிப்ப்ராயத்தை பின்னூட்டம் வழியாக கூறுங்கள்.

ஜின் தொழும் ,என்னை திகில் எற்படுத்திய அந்த வீடியோ காட்சி இதோ

Sunday, July 4, 2010

நிறைந்திடும் நெஞ்சம்





நபிகள் நாயகம் அவதரித்தார்
இந்த அகிலம் முழுதும் ஆதரித்தார்

வேண்டிய வாழ்வு நமக்களிக்க
ஏகன் இறையை வேண்டிடுவார்

துன்பங்கள் நீங்கி சுகம் அளிக்க
துயரங்கள் இல்லா வாழ்வாங்க

நிம்மதியான நெஞ்சம் பெற
தூய இறையிடம் பரிந்துரைப்பார்

இறைவனை என்றும் நினைவு கொள்வோம்
இறைத்தூதரின் சொற்படி வழி நடப்போம்

இறைவனைத்தொழுதே துதித்திடுவோம்
இறை அச்சமுடன் நாம் வாழ்ந்திடுவோம்

எரியும் பகையினை அணைத்திடவே
அவன் பால் உலகை உயர்த்திடவே

தகிக்கும் பொறாமை தணிந்திடவே
வெறுக்கும் அவாவை ஒழித்திடவே

மனதினில் நாமே உறுதிகொள்வோம்
தொண்டால் நாமும் நிலைத்திடுவோம்

கற்றதன் பலனை கண்டிடுவோம்
இறைநபி வழியில் சென்றிடுவோம்

அத்தனை நலமும் நாம் பெறுவோம்
நம் நெஞ்சங்கள் நிறைந்திடும் இறை நினைவில்

Friday, July 2, 2010

ஏன் படைத்தாய் இறைவா!

மானுட ஜாதியை ஏன் படைத்தாய்
மனதினில் பொறாமையை ஏன் விதைத்தாய்

நெறியாய் வாழவும் தெரியவில்லை
நபி நேர் வழி காணவும் புரியவில்லை

தம்மின மனுஷ இதயங்களின்
உணர்வுகள் ஒன்றும் புரிவதில்லை

மனதினில் தோன்றிய கசடுகள்
எண்ணத்தில் உதித்த வக்கிரங்கள்
அத்தனையும் போட்டுடைத்து
நல்லிதயங்களை கொலை செய்யும்
கல்லிதயங்கள் ஏன் படைத்தாய்

தாந்தோன்றித்தனமாக நெறியின்றி
வாயில் வந்ததெல்லாம் பேசி
வார்த்தைகளால் விளையாடி
வஞ்சிக்கும் அவலம் இந்த
புவியார்க்கு இல்லாமல்
காத்தருள் காத்தருள் என்னிறைவா

அமைதியாய் வாழ்வதும் பிடிக்கவில்லை
எதிர்ப்பைக்காட்டவும் பிடிக்கவில்லை
இரண்டுக்கும் நடுவாய் வாழ்வதென்றால்
யாரும் துரும்பாய்.எறும்பாய் பிறக்கவில்லை.

இறுதி நபியை அனுப்பிவைத்தாய்
இகத்தை ஒளிவழி சேர்த்து வைத்தாய்
இன்னும் மனிதன் திருந்தவில்லை
மன இருளை விலக்கிட முனையவில்லை.

படித்ததில் பதிந்தவை