Sunday, August 29, 2010

முத்துக்கள் மும்மூன்று.



1.அல்லாஹ்வின் தூதுவர்கள் மூவர்

1.மார்க்க யுத்தம் செய்பவர்
2.ஹஜ்ஜுக்கு செல்பவர்
3.உம்ரா செல்பவர்.

அ:அபுஹுரைரா(ரலி)
ஆ:நஸாயீ


2.அல்லாஹ்வின் பொறுப்பில் இருப்பவர் மூவர்

1.அல்லாஹ்வின் வழியில் போர் செய்பவர்
2பள்ளிவாசலுக்கு செல்பவர்
3.தன் வீட்டிற்கு அமைதி நாடி செலபவர்.

அ:அபு உமாமா
ஆ:அபூதாவூத்

3.மூவித நற்செயல்கள் எவரில் குடி உள்ளதோ அவர் மீது அல்லாஹ் தன் அடைக்கல ப்போர்வையை போர்த்தி அவரை சுவனபதியில் சேர்க்கின்றான்.

1.இயலாதோருக்கு உதவுதல்
2.பெற்றோர் மீது அன்பு கொள்ளுதல்
3.அடிமைக்கு உதவுதல்.

அ:ஜாபிர் (ரல்)
ஆ"முஸ்லிம்

4.அல்லாஹ் நேசம் கொள்ளும் மூவர்.

1.மறைவாக தானம் அளிப்பவர்
2நிறைவாக இறைமறை ஓதுபவர்
3.அஞ்சா நெஞ்சத்துடன் மார்க்கப்போர் புரிபவர்.

அ:அபுசர்
ஆ:திர்மிதி

5.அல்லாஹ் சினம் கொள்ளும் மூவர்

1.விபச்சாரம் செய்பவர்
2.பெருமைபாராட்டும் ஏழை
3.அநியாயம் செய்யும் செல்வந்தர்

அ:அபுசர்
ஆ:திர்மிதி

6.மனிதன் இறந்து விட்டாலும் முடிவுறாத மூன்று செயல்கள்

  1. நிலையான தர்மம் ... உதா: குளம் வெட்டுதல் , கிணறு வெட்டுதல் , நிழல தரும் , மற்றும் கனி தரும் மரம் நடுதல்(( ஊர் பொதுவாக உபயோகிக்க))
  2. நேர்மையான கற்று பிறருக்கும் கற்பித்த கல்வி.
  3. சாலிஹான பிள்ளைகள்.. (( தன் தாய் தந்தைக்காக துவா செய்யும் பிள்ளை))
அ:அலி(ரலி)
ஆ:திர்மிதி


7.மூன்றுவித மனிதருடன் மறுமையில் இறைவன் உரையாட மாட்டான்.

1.விபச்சாரம் புரிபவர்
2.பொய் கூறும் அதிகாரி
3.சக்தி இருந்தும் உழைக்காத குடும்பஸ்தன்
அ:அபூஹுரைரா

ஆமுஸ்லிம்,நசாயீ

8.மூன்றுவித மனிதர்களை இறைவன் மறுமையில் நோக்க மாட்டான்

1.பெற்றோருக்கு மாறு செய்பவன்
2.ஆண் ஆடை அணியும் பெண்
3.ரோஷம்,சுரணை அற்றவன்.

அ:இபுனு உமர்
ஆ:நஸாயீ

9.மூன்று வித மனிதர்கள் மறுமையில் நாயகத்தின் விரோதிகள்.

1.மோசம் செய்பவன்
2.சுதந்திரமுள்ள மனிதனை விற்று அதனை உண்பவன்.
3.வேலைக்குறிய கூலியை பணியாளுக்கு அளிக்காதவன்.

அ:முகீரா(ரலி)
ஆ:புகாரி

10.இறைவன் அறுவெறுப்படையும் மூவித செயல்கள்.

1.பயனற்ற பேச்சு பேசுதல்
2.பணத்தை வீண் விரயமாக்குதல்
3.அதிகமாக பொருட்களை கேட்குதல்

அ:முகீரா(ரலி)
ஆ:புகாரி




Thursday, August 26, 2010

இருதயத்தை சுத்தி செய்யும் சூட்சுமம்


ஹஸன் பஸ்ரி(ரஹ்) கூறினார்கள்."ஒரு நாள் பஸ்ரா நகரத்தில் ஒரு கடைவீதியில் நான் சென்று கொண்டிருந்த பொழுது அங்கே ஒரு மருத்துவரைக்கண்டேன்.மக்கள் அம்மருத்துவரை அணுகி தங்களது நோயை விளக்கி மருந்துகளை பெறுவதற்காக அவரை சூழ்ந்து நின்றிருந்தனர்.என்னுடன் நின்றிருந்த ஒரு வாலிபர் அவரை அணுகி "வைத்தியரே!பாவங்களை அகற்றி,இருதயங்களை சுத்தி செய்யும் மருந்துகள் தங்களிடம் உண்டா?"எனக்கேட்டார்.

"ஆம்!என்னிடம் உண்டு நான் தரும் பத்து வஸ்துக்களைப்பெற்றுக்கொள் என்ற வைத்தியர் பின் வறுமாறு கூறினார்.

"பணி வென்னும் மரச்சாற்றுடன்,ஏழ்மை எனும் மரச்சாற்றை எடுத்துக்கொள்.அதில் தவ்பா என்னும் கடுக்காயைப்போட்டு,திருப்தி என்ற உரலில் இட்டு,போதும் என்ற குழவியினால் அதனை அரை.பக்தி என்ற பாத்திரத்தில் ஊற்றி நாணம் என்ற நீரை ஊற்று.அன்பு எனும் நெருப்பினால் அதனை காய்ச்சி,நன்றி என்னும் குவளையில் ஊற்றி,ஆதரவு என்ற விசிறியால் ஆற்று.பின்னர் புகழ் என்ற கரண்டியால் அதனைப்பருகு.நீ அவ்வாறு செய்தால் உனது இம்மை,மறுமையின் எல்லாவித நோய்களும் தீரும்"என்றார் வைத்தியர்.








Wednesday, August 25, 2010

எளிமையின் சிகரம் ஹஜரத் அலி (ரலி)



ஹஜரத் அலி (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் வெளிநாட்டு பிரயாணி ஒருவரின் ஒட்டகம் வழியினில் இறந்து விட கலீபா அலி (ரலி) அவர்களை சந்தித்து தமக்கு உதவி கேட்கலாம் என்ற எண்ணத்துடன் வெகு தூரம் நடந்து வந்து தலைநகர் மதீனா வந்து சேர்ந்தார் அவ்வெளிநாட்டுப்பிரயாணி.பின்னர் கலீபாவின் திருமகனார் ஹஜரத் ஹுசைன் (ரலி) அவர்களை சந்தித்து விஷயத்தைக்கூறினார்.

தனது தந்தையார் வெளியில் சென்று இருப்பதாகவும்,அன்னார் வரும் வரை பள்ளிவாசலில் இருக்கும் படி கூறி விட்டு அவருக்கு உணவு கொண்டு வருவதற்காக தன் இல்லத்திற்கு சென்று விட்டார்கள்.

அன்னார் சென்ற சிறிது நேரத்தில் பள்ளிவாசலுக்கு வந்த ஒரு எளியவர் ஒரு ஓரத்தில் அமர்ந்து தாம் கொண்டுவந்த அந்த உணவை உண்ண ஆரம்பித்தார்.சற்று நேரத்தில் ஹுசைன் (ரலி)அவர்கள் தான் கொண்டு வந்த உணவை பிரயாணி முன் வைத்து உண்ணுமாறு வேண்டினார்.

அதற்கு அப்பிரயாணி ஓரத்தில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தவரை சுட்டிக்காட்டி "அதோ,அங்கே பாருங்கள்!பாவம் அவர் மிகுந்த எழை போல் தெரிகின்றது.அவரிடம் காய்ந்து போன ரொட்டிகள்தான் இருக்கின்றது.தொட்டுக்கொள்ளக்கூட எதுவுமின்றி காய்ந்த ரொட்டிகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றார்.அவரை இங்கே அழைத்து வாருங்கள்.அவர் என்னுடன் சேர்ந்து இந்த உணவை அருந்தட்டும்" என்றார்.

வெளிநாட்டுப்பிரயாணி சுட்டிக்காட்டிய திக்கை நோக்கிய ஹஜ்ரத் ஹுசைன்(ரலி) அவர்கள் புன்னகை புரிந்தவர்களாக கூறினார்கள்."அவர்கள் வேறு யாரும் அல்ல.நீங்கள் நாடி வந்தவர்களும்,என் தந்தையுமான கலீபா அலி (ரலி)அவர்கள் தான்.எப்பொழுதும் அவர்கள் வழக்கமாக உண்ணும் உணவைத்தான் உண்டுகொண்டிருகின்றார்கள்.இதை விட சிறந்த உணவை அவர்கள் உண்பதில்லை."என்று கூறினார்கள்.

மாபெரும் இஸ்லாமிய பேரரசின் ஈடு இணையற்ற தலைவர் ,அன்னாரின் காலடியில் செல்வங்கள் கொட்டிக்கிடக்கின்றது.ஆயினும் அன்னார் உண்பதோ....!!!!
வெளிநாட்டு பிரயாணி அப்படியே மலைத்து நின்றார்.

Saturday, August 21, 2010

ஏழைகளின் அறம்




"நாயகமே!செல்வந்தர்கள் நன்மைகளை எல்லாம் அபகரித்துக்கொண்டு சென்றுவிடுகின்றார்கள்..நாங்கள் தொழுவது போல் அவர்களும் தொழுகின்றனர்.நாங்கள் நோன்பு நோற்பது போல் அவர்களும் நோன்பு நோற்று விடுகின்றனர்.ஆனால் தங்களிடன் உள்ள செல்வத்தை எழைகளுக்கு வாரி வழங்கி நன்மைகளை எல்லாம் பெற்று விடுகின்றனர்.எங்களால் அறம் செய்ய முடிய வில்லையே"என்று சில வறிய முஹாஜிரீன்கள் ஏக்கத்துடன் கேட்டனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அறம் செய்யக்கூடிய தகுதியை நிச்சயமாக அளித்துள்ளான்.நிச்சயமாக சுப்ஹானல்லாஹ் என்ற ஒவ்வொரு தஸ்பீஹும் அல்ஹம்துலில்லாஹ் என்ற ஒவ்வொரு தஹ்மீதும்,அல்லாஹு அக்பர் என்ற ஒவ்வொரு தக்பீரும் அறத்தை சார்ந்தவையே ஆகும்.இன்னும் நற் செயல் புரியுமாறு பிறரை பணிப்பதும் அறம்தான்.தீயசெயல் புரியாது விலக்குவதும் அறம்தான்"என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:அபூதர் (ரலி)
ஆதாரம்:முஸ்லிம்


Add Video