Friday, January 20, 2012

இமாம் கஸ்ஸாலியின் இரக்ககுணம்

இமாம் கஸ்ஸாலி (ரஹ்)அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் ”ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்” - ”அறிவுலகப்பேரொளி” என்று போற்றப்பட்டவர்.இவர் ”இஹ்யாவு உலூமித்தீன்”,”கீமியாயே சாஆதத்” என்ற மாபெரும் நூற்களை புனைந்து வரலாறு போற்றப்படும் பேரறிஞர்.இவர் எழுதிய நூற்கள் காலவெள்ளத்தைக்கடந்தும் நிலைத்து நிற்பவை.

ஒரு நாள் அவர் தம் எழுது கோலால் மையை தோய்த்து எழுதிக்கொண்டிருந்தார்.அப்பொழுது ஒரு ஈ அவரது எழுதுகோலின் முனையில் வந்து அமர்ந்து அதிலிருந்த மையை குடித்தது.அந்தக்காலத்தில் மைகள் எல்லாம் அரிசி,மாவில் இருந்துதான் தயாரிக்கப்படும்.

ஈ தன் தாகம் தீரும் வரை குடிக்கட்டும் என்று எழுது கோலை ஆடாமல் அசையாமல் பிடித்து இருந்தார்.ஈ தன் தாகம் தீரும் மட்டும் குடித்து விட்டு அங்கிருந்து பறந்து சென்றது.அது வரை பொறுமையுடன் காத்திருந்து பிற்பாடே அவர் மறுபடியும் தொடர்ந்து எழுதத்தொடங்கினார்.அவரது இந்த இரக்க சுபாவம் காலவெள்ளத்தைக்கடந்தும் போற்றப்படுகின்றது.

Friday, January 13, 2012

பரகத்

ஒரு நாள் அப்பாஸிய கலீஃபா ஹாரூன் ரஷீத் தன் நண்பர் ஒருவருடன் உணவருந்திக்கொண்டிருந்தார்.அப்பொழுது உணவுப்பொருட்கள் சிதறி விரிப்பில் விழுந்தன.

நண்பர் சிதறிய அந்த உணவுப்பொருளை பொறுக்கி எடுத்து உண்ணலானார்.ஹாரூன் ரஷீதுக்கு இது அறுவருப்பாக தோன்றியது.நண்பரை ஏறிட்டுப்பார்த்தார்.

எதற்காக கலீஃபா தம்மை ஏறிடுகின்றார் என்பதை உணர்ந்த கொண்டு நண்பர் இவ்விதம் கூறினார்.”அண்ணல் நபி (ஸல்)அவர்கள் இப்படி சிதறி விழும் உணவை எடுத்து அருந்துபவருக்கு பரகத் (அபிவிருத்தி)எப்பொழுதும் இருக்கும்”என்று கூறியதை எடுத்துச்சொன்னார்.

இதனைக்கேட்ட கலீஃபா “இது எனக்கு தெரியாதே.இது வரை நான் அறிந்திருக்க வில்லையே.இதனை நீங்கள் என்னிடம் கூறியதுக்காக என் அன்புப்பரிசாக இதனை ஏற்றுக்கொள்ளுங்கள்”என ஒரு உயரிய மணிமாலையை பரிசளித்தார்.

அதனைப்பெற்றுக்கொண்ட நண்பர் “பார்த்தீர்களா?இப்பொழுதுதான் சிதறி விழுந்த உணவுப்பொருளை எடுத்து அருந்தினேன்.உடனே பரகத் கிடைத்து விட்டது”என்றார்.அல்லாஹ்வின் ரசூலின் வாக்கு எத்தனை சத்தியமானது என்பதினை உணர்ந்து நண்பர்கள் இருவரும் சிலாகித்து மகிழ்ந்தனர்.

Wednesday, January 11, 2012

அன்னை உம்மு ஹபீபா(ரலி)



அன்னை உம்மு ஹபீபா பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவி ஆகி மதினாவில் வசித்த பொழுது அவரது தந்தை அபு சுப்யான் அவரைக்காண வந்திருந்தார்.சுப்யான் இஸ்லாத்திற்கு மாறு பட்டவர்.உம்மு ஹபீபாவின் குடிலில் ஒரு ஜமக்காளம் விரித்து இருந்ததின் மீது சுப்யான் அமர யத்தனித்த பொழுது உம்மு ஹபீபா அதனை அவசர அவசரமாக சுருட்டி வைத்து விட்டு தந்தை அமர ஒரு பாயை கொணர்ந்து போட்டார்.

இதனைக்கண்ட சுப்யான் கோபத்துடன் “மகளே,இந்த ஜமக்காளம் நான் இருக்க தகுதி அற்றதா?அல்லது நான் இதில் அமர தகுதி அற்றவனா?அதனை ஏன் சுருட்டி வைத்து விட்டாய்?:”என்று வினவினார்.

அதற்கு உம்மு ஹபீபா “அது பெருமானார் (ஸல்) அவர்கள் பரிசுத்த திருமேனி அமரும் விரிப்பு.ஆதலால் நிராகரிப்பாவரான அபு சுப்யான் அமர தகுதி அற்றது”என்று தன் தந்தையைப்பார்த்துக்கூறினார்.

Thursday, May 19, 2011

துஆ செய்யுங்கள்.


எனது மதிப்புக்குறிய சாச்சாவும்,சம்பந்தியுமான ஆலிஜனாப் எஸ் எம் எஸ்

ஹாஜா முஹைதீன்(உரிமையாளர் சாரா ஸ்டீல் ஏஜென்ஸீஸ்,நாச்சியார்

ஏஜன்ஸீஸ்.கீழக்கரை) அவர்கள் கடந்த 8.5.11 அன்று சென்னையில் வபாத் ஆகி

9.5.11 அன்று கீழக்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.(இன்னாலில்லாஹி

வ இன்னா இலைஹி ராஜிவூன்).

அன்னாரின் மஃபிரத்துக்காக துஆ செய்யும் படி இனிய நட்புக்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

Monday, March 7, 2011

எது சிறந்தது?

இப்னு அப்பாஸ்(ரலி)அவர்களிடம் “நாட்களில் சிறந்த நாள் எது?மாதங்களில் மகத்தானது எது?நன்மைகளில் மேலானது எது?என்று வினவப்பட்டபொழுது அவர்கள் அதற்கு கீழ்கண்டவாறு பதிலளித்தார்கள்.

“நாட்களில் மேலானது வெள்ளிக்கிழமை
மாதங்களில் மகத்தானது ரமலான் மாதம்
நன்மைகளில் சிறந்தது ஐவேளை தொழுகையை அதற்குறிய நேரங்களில் தொழுவது”

இவ்விஷயம் அறிவின் தலைவாசல் அலி(ரலி)அவர்களுக்கு எட்டிய பொழுது ”உலகில் கிழக்கு மேற்கு அனைத்திலும் உள்ள அறிஞர்களும்,மார்க்க வல்லுனர்களும் இப்னு அப்பாஸ் கூறியதைப்போல் பதிலளிக்க இயலாது.இருப்பினும் நான் கூறுவேன் “நண்மைகளில் சிறந்தது இறைவன் உன்னிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நன்மை.
மாதங்களில் மேலானது நீ உன் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக்கோரி இறைவனிடம் தூய்மை அடைந்த மாதம்,
நாட்களில் சிறந்தது நீ இவ்வுலகில் அல்லாஹ்வின் நல்லடியானாக இறையடி ஏகும் நாள்”என்று உரைத்தார்கள்.



Saturday, February 12, 2011

தும்மல்

நிச்சயமாக அல்லாஹ் தும்முவதை உவக்கின்றான்.கொட்டாவி விடுவதை உவப்பதில்லை.எனவே உங்களில் எவரேனும் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று இறைவனைப்புகழ்ந்தால் அதனை செவியுறும் ஒவ்வொரு முஃமினும் “யர்ஹமுகல்லாஹ்”என்று மறு மொழி பகர வேண்டியது கடமையாகும்.ஆனால் கொட்டாவி ஷைத்தானின் புறத்தால் வருவதாகும்.எனவே உங்களில் எவருக்கேனும் கொட்டாவி வரும் பொழுது இயன்ற அளவு அதனை அடக்கிக்கொள்ளுங்கள்.(வாயை மூடிக்கொள்ளவும்)ஹா..ஹா..எனக்கூற வேண்டாம்.இது செய்தானின் செய்கையாகும்.இதனைக்கண்டு ஷைத்தான் சிரிக்கின்றான்.
அறிவிப்பாளர்:அபூஹுரைரா(ரலி)
ஆதாரம்:புகாரி,முஸ்லிம்,அபூதாவூத்,திர்மதி

நிச்சயமாக நான் ஒரு சொற்றொடரை அறிவேன்.அதனைக்கூறின் நிச்சயமாக அவரை விட்டும் அவரது சினம் பறந்து விடும்.அது “அவூதுபில்லாஹி மினஸ்ஷைத்தானனிர்ரஜீம்”(விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
அறிவிப்பாளர்:முஆதுபுனு ஜபல்
ஆதாரம்:அபூதாவூத்,திர்மிதி

அறிந்து கொள்ளுங்கள் எவன் சினமுறும் பொழுது தன்னைத்தானே அடக்கியாள ஆற்றல் பெற்றுள்ளானோ அவனே உண்மையான வீரன்.
அறிவிப்பாளர்:இபுனு மஸ்வூத்
ஆதாரம்:முஸ்லிம்,அபூதாவூத்

Wednesday, December 15, 2010

துஆ


எத்தனையோ திக்கற்றவர்கள் வானத்தின் பால் கையேந்தி “யா ரப்பு! யா ரப்பு!”என்று துஆ கேட்கின்றனர்.ஆனால் அவர்களின் உணவு,உடை,இருப்பு,அனைத்தும் ஹராம்.இந்நிலையில் கேட்கும் துஆ இறைவனால் அங்கீகரிக்கப்படாது என்பது மாநபியின் நல்வாக்காகும்.

”கூபா”நகரிலே மகான்களின் கூட்டம் ஒன்று இருந்தது.அவர்கள் துஆ கேட்டால் உடனே அங்கீகரிக்கப்பட்டுவிடும்.அந்நகரத்தில் அநீதி செய்யப்படும் அதிகாரி நியமிக்கப்பட்டால் உடனே இவர்கள் துஆ செய்வார்கள்.அத்துடன் அந்த அதிகாரியின் ஆக்ரமிப்பு அழிந்து போகும்.மழை வேண்டிக்கேட்டால் உடன் மழை பொழியும்,இவ்வாறாக கூபா நகரில் அந்த மகான் கூட்டம் மக்களுக்காக பிரார்த்தனை செய்து வந்தது.

கொடியோன் ஹஜ்ஜாஜ் அதிகாரியாக நியமிக்கப்பட்டதும்,அவன் ஒரு சூழ்ச்சி செய்தான்.அந்த மகான்கள் அனைவருக்கும் விருந்து அளித்தான்.அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் நான் இந்த மகான்களின் சாபக்கேட்டில்; இருந்து தப்பித்து விட்டேன்.”என்று ஹஜ்ஜாஜ் கூறினான்.காரணம் என்னவென்று விசாரித்ததில் “மகான்களின் வயிற்றில் ஹராமான உணவு சென்று விட்டது”என்று கூறினான்.

ஹராமான உணவு மகான்களின் வயிற்றினுள் சென்று விட்டபடியால் அவர்கள் கேட்கும் துஆ இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று ஹஜ்ஜாஜ் கொக்கரித்த்து அவனது மதியீனம் இன்றி வேறென்ன?