Showing posts with label தர்மம். Show all posts
Showing posts with label தர்மம். Show all posts

Saturday, July 24, 2010

அறம் என்னும் அற்புதம்


புரவி மீது இவர்ந்து வந்து யாசிப்போருக்கும் தானம் அளியுங்கள்.
அ:அதிபிப்னு ஹாதிம்
ஆ:புகாரி,முஸ்லிம் நஸாயீ

தம்முடைய அவசியத்தேவைகளில் இருந்து மீதமுள்ளதை தர்மம் செய்வதும்,தன் குடும்பத்தாரில் இருந்து தர்மம் செய்யத்துவங்குவதும் மேலான தர்மம் ஆகும்.
அ:அபூ ஹுரைரா
ஆ:புகாரி,அபூதாவுத்,நஸாயீ

தர்மம் செய்தவர் தன் செய்த தர்மத்தை திரும்ப பெறுவாராயின் வாந்தி எடுத்ததை மீண்டும் உண்பதற்கு நிகராவார்.
அ:உமர் (ரலி)
ஆ:புகாரி,முஸ்லிம் நஸாயீ,முஅத்தா,திர்மிதி

அறம் செய்தல் இறைவனது சினத்தை தணிய வைத்து தீய இறப்பை விட்டும் மனிதனை காக்கின்றது.
அ:அபூ ஹுரைரா
ஆ:திர்மிதி

"ஒரு லட்சம் பொன் நாணயத்தை விட ஒரே ஒரு பொன் நாணயம் உயர்வானதாகி விட்டது"நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன பொழுது "நாயகமே!அது எங்ஙனம் "என்று வினவப்பட்டது.

"ஒரு மனிதரிடம் இரண்டே பொன் நாணயங்கள் இருந்தன.அவற்றில் இருந்து நல்லவற்றை தேர்ந்தெடுத்து தானம் செய்து விட்டார்.மற்றொரு செல்வந்தர் தன் கருவூலத்தில் இருந்து ஒரு லட்சம் பொன் நாணயங்களை எடுத்து தானம் செய்து விட்டார்.முந்தியவர் தானம் செய்த நல்ல ஒரு பொன் நாணயம் ,பிந்தியவருடைய ஒரு லட்சம் பொன் நாணயத்தை விட சிறந்ததாகி விட்டது.ஏனெனில் முன்னவர் தன் பொருளில் இருந்து பாதியில் நல்லவற்றை அளித்தார்.பின்னவர் தன் கருவூலத்தில் இருந்து ஒரு சிறு பாகத்தினை அளித்தார்"என மறு மொழி பகர்ந்தார்கள்.
அ:அபூ ஹுரைரா
ஆ:திர்மிதி

Wednesday, July 7, 2010

அறத்தின் மகத்துவம்


பிர்அவுனைபற்றி குர் ஆனிலும்,ஹதீஸ்களிலும்,வரலாறுகளிலும் நிறைய அறிந்திருப்போம்.
பிர்அவுன் - மூஸா (அலை) அவர்களுக்கு வழிப்படாமல்,தன்னையே இறைவன் என்று கூறிய கொடியவன்.இறைவனுக்கு முற்றிலும் மாறுபட்டவன்."அல்லாஹ் ஒருவனே" என்று அந்த அர்ஷுக்குரியவனை வழிப்பட்ட மூஸா (அலை)அவர்களை பின்பற்றிய மக்களை துன்புறுத்தி கொடுமை செய்தவன்.அவனது சொல்லொண்ணா தொல்லைகளை கண்ட மூஸா (அலை)அவர்கள் இறைவனிடன் பிர் அவுனை அழித்து விடுமாறு மன்றாட்டம் செய்தார்கள்.

இறைத்தூதர்களான நபிமார்களின் பிரார்த்தனை உடனே அங்கீகரிக்கப்பட்டுவிடும் அல்லாஹ்விடத்தில்.அப்படி இருந்தும் பிர் அவுன் அழிக்கப்படாமல் மூஸா(அலை) அவர்களின் து ஆ கபூல் செய்யப்படாமல் இருந்து வந்தது.தொடர்ந்து பிர் அவுனின் தொல்லைகள் அதிகரிக்கத்தான் செய்தது.

இதனைக்கண்ட நபியவர்கள்"இறைவா!நபிமார்களின் பிரார்த்தனையை உடனே நிறைவேற்றுவதாக வாக்களித்து இருந்தாயே!ஆனால் பிர் அவுன் அழிக்கப்படாமல் இருக்கின்றானே?"என இறைவனிடம் வினவினார்கள்.

அதற்கு வல்ல இறைவன்"ஓ..மூஸாவே..நான் அவ்விதம் வாக்களித்திருப்பது உண்மைதான்.பிர் அவுன் இத்தனை அநியாயக்காரனாக இருந்தாலும் ஒரு சில நற்கிரியைகள் செய்து வருகின்றான்.அதனால் அவன் அழிக்கப்படாமல் தாமதப்படுத்தபட்டுள்ளான்"என்றுரைத்தான்.

"பிர் அவுன் இடத்திலுமா நற்கிரியைகள் நிகழ்கின்றன?" மூஸா (அலை)அவர்கள் திகைப்புடன் வினவ

"ஓ..மூஸாவே!அவன் அரசாட்சியில் ஏழைகளுக்கு மடங்கள் கட்டி உள்ளான்.அவனது ஆட்சியில் பசித்தோருக்கு அன்னதானம் வழங்கி உள்ளான்.வறியோர்கள் வயிறார உண்ட பின் அவனை அகம் குளிர வாழ்த்திவிட்டுஅவனுக்காக என்னிடம் பிரார்தனை செய்கின்றனர்"என இறைவன் கூறினான்.

பிர் அவுன் இந்த தர்மங்களை மக்கள் தன்னை ஏற்றிப்போற்றி,புகழவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே செய்து வந்தான்.இருப்பினும் அவனது இந்த தர்ம செயல்களால் ஏழை எளியவர்கள் நிறைவு பெறுகின்றனர் என்ற ஒரே காரணத்தினால் அவன் அழிக்கப்படாமல் தாமதப்படுத்தபட்டுள்ளான்.

பிர் அவுன் எப்படிப்பட்ட கொடூரன்.இருப்பினும் அவன் செய்த தர்மம் ,தர்மத்தின் தலைவனான அல்லாஹ்வையே அவன் மீது நோக்கச் செய்து விட்டது
என்றால் அந்த தர்மத்தின் மகத்துவம்,சக்தியை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

பிர் அவுன் தர்மச்செயல் புரிந்ததால் இறைவனின் அன்பை எட்டி விட இயலாதுதான்.பிர் அவுன் எப்பொழுது தானே இறைவன் என்று மமதை கொண்டு ஆடினானோ அக்கணமே இறைவனால் சபிக்கப்பட்டவன் ஆகிவிட்டான்.என்றாலும் தர்மத்தின் தன்மையானது இறைவனை மிகவுமே கவர்ந்து விடுகின்றது என்ற காரணத்தினாலேயேதான் பிர் அவுன் அழிவை விட்டும் சிறிது தாமதபடுத்தபட்டான்

தர்மத்தின் சக்தி எத்தனை வல்லமையானது.அல்ஹம்துலில்லாஹ்!

Sunday, June 27, 2010

(15) தர்மத்தின் சிறப்பு

அல்லாஹ் ஜல்லஸானஹுதாஆலா இப்பூமியை படைத்த பொழுது அது அசைந்து ஆடி நடுங்கியது.எனவே அதன் மீது மலைகளை நிலை நாட்டினான்.பூமியின் மீது மலைகளை உற்பத்தி செய்து அமைத்த பின்னர் பூமி நிலை பெற்றுவிட்டது.மலைகளின் உறுதியையும்,பிரமாண்டத்தையும் கண்ணுற்ற வானவர்கள கீழ்கண்டவாறு இறைவனிடம் கேட்டனர்.

வானவர்கள்: யா அல்லாஹ்!மலைகளைவிட உறுதியானவற்றை இவ்வுலகில் நீ படைத்து இருக்கின்றாயா?

இறைவன்: ஆம்!இரும்பை படைத்துள்ளேன்.மலையையே தகர்க்கும் சக்திகொண்டது இரும்பு.


வானவர்கள்: இரும்பை விட உறுதியான படைப்பை படைத்து இருக்கின்றாயா?

இறைவன்: ஆம்!நெருப்பை படைத்து இருக்கின்றேன்.ஏனெனில் அந்த இரும்பையே உருக்கும் ஆற்றல் கொண்டது நெருப்பு.


வானவர்கள்: நெருப்பைவிட உறுதியான படைப்பை படைத்து இருக்கின்றாயா?

இறைவன்: ஆம்!நீரை படைத்து இருக்கின்றேன்.நீரானது நெருப்பையே அழிக்கக்கூடிய திறன் வாய்ந்தது.


வானவர்கள்: நீரை விட உறுதியான படைப்பை நீ படைத்து இருக்கின்றாயா?

இறைவன்: ஆம்!காற்றை படைத்து இருக்கின்றேன்.காற்றானது நீரையே அலைகழிக்கும் ஆற்றல் மிக்கது.


வானவர்கள்: காற்றைவிட உறுதியான படைப்பை நீ படைத்து இருக்கின்றாயா?

இறைவன்: ஆம்!ஆதத்தின் சந்ததிகளைப்படைத்துள்ளேன் - ஆனால் அவர்கள் இடக்கைக்கு தெரியாமல் வலக்கையால் ஏதேனும் தர்மம் செய்யும் பொழுதுதான்.

இவ்வாறு இறைவன் கூறியதாக அண்ணல் நபி (ஸல்)அவர்கள் பகர்ந்துள்ளார்கள்.தர்மத்தின் வலிமையை பார்த்தீர்களா?சுப்ஹானல்லாஹ்!

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)
ஆதாரம்: திர்மிதி