Wednesday, July 10, 2013

ரமலான் கரீம்


Wednesday, February 22, 2012

எளிய திருமணம்



ஹள்ரத் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் நாயகத்தோழர்களிலேயே பிரபலமான செல்வந்தர்.பெரும் செல்வந்தராக இருந்தாலும் படு எளிமையாக வாழ்ந்தவர் ஆவார்.

அவரது திருமணம் மதினா நகரில் நடந்தது.அது சமயம் பெருமானார் (ஸல்)அவர்கள் மதினா நகரில் இருந்த போதிலும் தமது திருமணத்தைப்பற்றி ஒரு வார்த்தைகூட கூற விலை.

திருமணத்திற்கு அடுத்த நாள் ஹள்ரத் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி) அவர்கள் பெருமானார் முன் இருந்தார்கள்.அவர்களைக்கண்டதும் அண்ணல்(நபி)ஸல் அவர்கள் “அப்துர்ரஹ்மான்,உம் மீது மணவாடை வீசுகின்றதே.என்ன விஷயம்?”
என்று வினவினார்கள்.

“ஆம் ரசூலுல்லாஹ் அவர்களே!நேற்று என் திருமணம் ஒரு அன்ஸாரி பெண்ணுடன் நடந்தது”என்றார் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி)அவர்கள்.

“அல்லாஹ் உடைய அருளும் மங்கலமும் உங்கள் இருவர் மீதும் உண்டவதாக “என்று பெருமானார் (ஸல்)அவர்கள் வாழ்த்தினார்கள்.

ஊர் மக்கள்: அனைவரையும் படை திரட்டி,லட்சக்கணக்கான கரன்சிகளை கொட்டி,விரயம் செய்து விருந்து வைத்து ,ஆடல் பாடல் மின்விளக்கு அலங்காரக்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்து நடத்தினால்தான் பெருமைக்குறிய விஷயம் என்று நினைக்கும் நம்மவர்களுக்கு நாயகத்தோழரின் திருமணத்தை எண்ணிப்பார்க்க வேண்டும்.திருமண செய்தி அதே ஊரில் இருந்த பெருமானார் (ஸல்)அவர்களுக்கே கூட தெரிவிக்கப்படாமல்,அவ்வளவு பெரிய செல்வந்தர் மிகவும் எளிமையை கடை பிடித்தார் என்பதைபற்றி திருமணம் என்ற பெயரில் தேவை அற்ற அனாச்சாரங்களும் ஆடம்பரங்களும் செய்வோர் எண்ணிப்பார்க்கவேண்டும்.


Friday, January 20, 2012

இமாம் கஸ்ஸாலியின் இரக்ககுணம்

இமாம் கஸ்ஸாலி (ரஹ்)அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் ”ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்” - ”அறிவுலகப்பேரொளி” என்று போற்றப்பட்டவர்.இவர் ”இஹ்யாவு உலூமித்தீன்”,”கீமியாயே சாஆதத்” என்ற மாபெரும் நூற்களை புனைந்து வரலாறு போற்றப்படும் பேரறிஞர்.இவர் எழுதிய நூற்கள் காலவெள்ளத்தைக்கடந்தும் நிலைத்து நிற்பவை.

ஒரு நாள் அவர் தம் எழுது கோலால் மையை தோய்த்து எழுதிக்கொண்டிருந்தார்.அப்பொழுது ஒரு ஈ அவரது எழுதுகோலின் முனையில் வந்து அமர்ந்து அதிலிருந்த மையை குடித்தது.அந்தக்காலத்தில் மைகள் எல்லாம் அரிசி,மாவில் இருந்துதான் தயாரிக்கப்படும்.

ஈ தன் தாகம் தீரும் வரை குடிக்கட்டும் என்று எழுது கோலை ஆடாமல் அசையாமல் பிடித்து இருந்தார்.ஈ தன் தாகம் தீரும் மட்டும் குடித்து விட்டு அங்கிருந்து பறந்து சென்றது.அது வரை பொறுமையுடன் காத்திருந்து பிற்பாடே அவர் மறுபடியும் தொடர்ந்து எழுதத்தொடங்கினார்.அவரது இந்த இரக்க சுபாவம் காலவெள்ளத்தைக்கடந்தும் போற்றப்படுகின்றது.

Friday, January 13, 2012

பரகத்

ஒரு நாள் அப்பாஸிய கலீஃபா ஹாரூன் ரஷீத் தன் நண்பர் ஒருவருடன் உணவருந்திக்கொண்டிருந்தார்.அப்பொழுது உணவுப்பொருட்கள் சிதறி விரிப்பில் விழுந்தன.

நண்பர் சிதறிய அந்த உணவுப்பொருளை பொறுக்கி எடுத்து உண்ணலானார்.ஹாரூன் ரஷீதுக்கு இது அறுவருப்பாக தோன்றியது.நண்பரை ஏறிட்டுப்பார்த்தார்.

எதற்காக கலீஃபா தம்மை ஏறிடுகின்றார் என்பதை உணர்ந்த கொண்டு நண்பர் இவ்விதம் கூறினார்.”அண்ணல் நபி (ஸல்)அவர்கள் இப்படி சிதறி விழும் உணவை எடுத்து அருந்துபவருக்கு பரகத் (அபிவிருத்தி)எப்பொழுதும் இருக்கும்”என்று கூறியதை எடுத்துச்சொன்னார்.

இதனைக்கேட்ட கலீஃபா “இது எனக்கு தெரியாதே.இது வரை நான் அறிந்திருக்க வில்லையே.இதனை நீங்கள் என்னிடம் கூறியதுக்காக என் அன்புப்பரிசாக இதனை ஏற்றுக்கொள்ளுங்கள்”என ஒரு உயரிய மணிமாலையை பரிசளித்தார்.

அதனைப்பெற்றுக்கொண்ட நண்பர் “பார்த்தீர்களா?இப்பொழுதுதான் சிதறி விழுந்த உணவுப்பொருளை எடுத்து அருந்தினேன்.உடனே பரகத் கிடைத்து விட்டது”என்றார்.அல்லாஹ்வின் ரசூலின் வாக்கு எத்தனை சத்தியமானது என்பதினை உணர்ந்து நண்பர்கள் இருவரும் சிலாகித்து மகிழ்ந்தனர்.

Wednesday, January 11, 2012

அன்னை உம்மு ஹபீபா(ரலி)



அன்னை உம்மு ஹபீபா பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவி ஆகி மதினாவில் வசித்த பொழுது அவரது தந்தை அபு சுப்யான் அவரைக்காண வந்திருந்தார்.சுப்யான் இஸ்லாத்திற்கு மாறு பட்டவர்.உம்மு ஹபீபாவின் குடிலில் ஒரு ஜமக்காளம் விரித்து இருந்ததின் மீது சுப்யான் அமர யத்தனித்த பொழுது உம்மு ஹபீபா அதனை அவசர அவசரமாக சுருட்டி வைத்து விட்டு தந்தை அமர ஒரு பாயை கொணர்ந்து போட்டார்.

இதனைக்கண்ட சுப்யான் கோபத்துடன் “மகளே,இந்த ஜமக்காளம் நான் இருக்க தகுதி அற்றதா?அல்லது நான் இதில் அமர தகுதி அற்றவனா?அதனை ஏன் சுருட்டி வைத்து விட்டாய்?:”என்று வினவினார்.

அதற்கு உம்மு ஹபீபா “அது பெருமானார் (ஸல்) அவர்கள் பரிசுத்த திருமேனி அமரும் விரிப்பு.ஆதலால் நிராகரிப்பாவரான அபு சுப்யான் அமர தகுதி அற்றது”என்று தன் தந்தையைப்பார்த்துக்கூறினார்.

Thursday, May 19, 2011

துஆ செய்யுங்கள்.


எனது மதிப்புக்குறிய சாச்சாவும்,சம்பந்தியுமான ஆலிஜனாப் எஸ் எம் எஸ்

ஹாஜா முஹைதீன்(உரிமையாளர் சாரா ஸ்டீல் ஏஜென்ஸீஸ்,நாச்சியார்

ஏஜன்ஸீஸ்.கீழக்கரை) அவர்கள் கடந்த 8.5.11 அன்று சென்னையில் வபாத் ஆகி

9.5.11 அன்று கீழக்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.(இன்னாலில்லாஹி

வ இன்னா இலைஹி ராஜிவூன்).

அன்னாரின் மஃபிரத்துக்காக துஆ செய்யும் படி இனிய நட்புக்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

Monday, March 7, 2011

எது சிறந்தது?

இப்னு அப்பாஸ்(ரலி)அவர்களிடம் “நாட்களில் சிறந்த நாள் எது?மாதங்களில் மகத்தானது எது?நன்மைகளில் மேலானது எது?என்று வினவப்பட்டபொழுது அவர்கள் அதற்கு கீழ்கண்டவாறு பதிலளித்தார்கள்.

“நாட்களில் மேலானது வெள்ளிக்கிழமை
மாதங்களில் மகத்தானது ரமலான் மாதம்
நன்மைகளில் சிறந்தது ஐவேளை தொழுகையை அதற்குறிய நேரங்களில் தொழுவது”

இவ்விஷயம் அறிவின் தலைவாசல் அலி(ரலி)அவர்களுக்கு எட்டிய பொழுது ”உலகில் கிழக்கு மேற்கு அனைத்திலும் உள்ள அறிஞர்களும்,மார்க்க வல்லுனர்களும் இப்னு அப்பாஸ் கூறியதைப்போல் பதிலளிக்க இயலாது.இருப்பினும் நான் கூறுவேன் “நண்மைகளில் சிறந்தது இறைவன் உன்னிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நன்மை.
மாதங்களில் மேலானது நீ உன் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக்கோரி இறைவனிடம் தூய்மை அடைந்த மாதம்,
நாட்களில் சிறந்தது நீ இவ்வுலகில் அல்லாஹ்வின் நல்லடியானாக இறையடி ஏகும் நாள்”என்று உரைத்தார்கள்.



Saturday, February 12, 2011

தும்மல்

நிச்சயமாக அல்லாஹ் தும்முவதை உவக்கின்றான்.கொட்டாவி விடுவதை உவப்பதில்லை.எனவே உங்களில் எவரேனும் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று இறைவனைப்புகழ்ந்தால் அதனை செவியுறும் ஒவ்வொரு முஃமினும் “யர்ஹமுகல்லாஹ்”என்று மறு மொழி பகர வேண்டியது கடமையாகும்.ஆனால் கொட்டாவி ஷைத்தானின் புறத்தால் வருவதாகும்.எனவே உங்களில் எவருக்கேனும் கொட்டாவி வரும் பொழுது இயன்ற அளவு அதனை அடக்கிக்கொள்ளுங்கள்.(வாயை மூடிக்கொள்ளவும்)ஹா..ஹா..எனக்கூற வேண்டாம்.இது செய்தானின் செய்கையாகும்.இதனைக்கண்டு ஷைத்தான் சிரிக்கின்றான்.
அறிவிப்பாளர்:அபூஹுரைரா(ரலி)
ஆதாரம்:புகாரி,முஸ்லிம்,அபூதாவூத்,திர்மதி

நிச்சயமாக நான் ஒரு சொற்றொடரை அறிவேன்.அதனைக்கூறின் நிச்சயமாக அவரை விட்டும் அவரது சினம் பறந்து விடும்.அது “அவூதுபில்லாஹி மினஸ்ஷைத்தானனிர்ரஜீம்”(விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
அறிவிப்பாளர்:முஆதுபுனு ஜபல்
ஆதாரம்:அபூதாவூத்,திர்மிதி

அறிந்து கொள்ளுங்கள் எவன் சினமுறும் பொழுது தன்னைத்தானே அடக்கியாள ஆற்றல் பெற்றுள்ளானோ அவனே உண்மையான வீரன்.
அறிவிப்பாளர்:இபுனு மஸ்வூத்
ஆதாரம்:முஸ்லிம்,அபூதாவூத்

Wednesday, December 15, 2010

துஆ


எத்தனையோ திக்கற்றவர்கள் வானத்தின் பால் கையேந்தி “யா ரப்பு! யா ரப்பு!”என்று துஆ கேட்கின்றனர்.ஆனால் அவர்களின் உணவு,உடை,இருப்பு,அனைத்தும் ஹராம்.இந்நிலையில் கேட்கும் துஆ இறைவனால் அங்கீகரிக்கப்படாது என்பது மாநபியின் நல்வாக்காகும்.

”கூபா”நகரிலே மகான்களின் கூட்டம் ஒன்று இருந்தது.அவர்கள் துஆ கேட்டால் உடனே அங்கீகரிக்கப்பட்டுவிடும்.அந்நகரத்தில் அநீதி செய்யப்படும் அதிகாரி நியமிக்கப்பட்டால் உடனே இவர்கள் துஆ செய்வார்கள்.அத்துடன் அந்த அதிகாரியின் ஆக்ரமிப்பு அழிந்து போகும்.மழை வேண்டிக்கேட்டால் உடன் மழை பொழியும்,இவ்வாறாக கூபா நகரில் அந்த மகான் கூட்டம் மக்களுக்காக பிரார்த்தனை செய்து வந்தது.

கொடியோன் ஹஜ்ஜாஜ் அதிகாரியாக நியமிக்கப்பட்டதும்,அவன் ஒரு சூழ்ச்சி செய்தான்.அந்த மகான்கள் அனைவருக்கும் விருந்து அளித்தான்.அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் நான் இந்த மகான்களின் சாபக்கேட்டில்; இருந்து தப்பித்து விட்டேன்.”என்று ஹஜ்ஜாஜ் கூறினான்.காரணம் என்னவென்று விசாரித்ததில் “மகான்களின் வயிற்றில் ஹராமான உணவு சென்று விட்டது”என்று கூறினான்.

ஹராமான உணவு மகான்களின் வயிற்றினுள் சென்று விட்டபடியால் அவர்கள் கேட்கும் துஆ இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று ஹஜ்ஜாஜ் கொக்கரித்த்து அவனது மதியீனம் இன்றி வேறென்ன?

Saturday, November 27, 2010

அரபிப் பதத்தின் விளக்கம் - 3


23.மகாமு மஹ்மூத் - புகழப்படும் அந்தஸ்த்து என்று பொருள்.மறுமையில் நீதி விசாரணைக்கு முன்பு மக்கள் வேதனையால் துன்புறும் பொழுது அதிலிருந்து அவர்களைக்காப்பாற்றும் பொருட்டு அல்லாஹ்வின் பரிந்துரை செய்யும் மிகப்பெரிய அந்தஸ்த்தை நபி (ஸல்)அவர்களுக்கே மட்டும் அல்லாஹ் வழங்குவான்.

24.மிஸ்ர் - இதன் சொற்பொருள் பட்டணம் என்பதாகும்.இஸ்லாமிய வழக்கில் இறைத்தூதர் மூஸா (அலை )அவர்கள் பிறந்த எகிப்து நாட்டினை குறிக்கும்.

25.முஸ்தலிஃபா - மக்காவிலுள்ள மினாவுக்கும் அரபாத்துக்கும் இடையில் உள்ள ஓர் இடமாகும்.ஹாஜிகள் அரஃபாவில் இருந்து வந்து முஸ்தலிஃபாவில் ஓர் இரவு தங்குவது ஹஜ்ஜின் கடமைகளுள் ஒன்றாகும்.

26.முஹர்ரம் - இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும்.

27.முஹாஜிர் - இதன் பொருள் இறைப் பொருத்தத்திற்காக இடம் பெயர்வோர் என்பதாகும்.அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் மக்காவில் இருந்து மதீனாவுக்கு கிளம்பியவர்கள் முஹாஜிரீன்கள் எனப்படுவர்.ஓரிறையை நிராகரிக்கும் ஆட்சியிலிருந்து தம்முடைய இறை நம்பிக்கையை காத்துக்கொள்ளவும்,இறைவன் தடுத்துள்ளதை விட்டும் தன் ஆத்மாவை காத்துகொள்ளவும் இடம் பெயர்பவர்களை முஹாஜிரீன்கள் எனக்கருதப்படுவர்.இறை மார்க்கத்தை பின்பற்றிட தடைகள் ஏற்படும் பொழுது தம் தாய் நாட்டை துறந்து வேற்றிடம் செல்பவர் என்றும் பொருள் கொள்ளலாம்.

28.யஸ்ரிப் - பெருமானார் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்துக்கு முன்பு மதீனாவின் பெயர் யஸ்ரிப் ஆகும்.எனவே இது மதீனாவின் பழைய பெயர் என்றும் கொள்ளலாம்.

29.ரமளான் - இஸ்லாமிய மாதங்களின் வரிசையில் இது ஒன்பதாவது மாதமாகும்.இம்மாதத்தில்தான் ஐம்பெரும் கடமைகளில் நான்காவது கடமையான நோன்பு நோற்கப்படுகின்றது.குர் ஆனில் குறிப்பிடப்படும் ஒரே மாதத்தின் பெயரும் இதுதான்.குர் ஆன் முதன் முதலாக பூமியில் இறங்கிய இரவும் இந்த மாதத்தில்த்தான் உள்ளது.

30.ரலி - ரலி என்பது ரலியல்லாஹு அன்ஹு என்றும் கருதலாம்.
இதன் பொருள் அல்லாஹ் அவரைப்பொருதிக்கொள்வானாக! என்பதாகும்.இது நபித் தோழர்களின் பெயருக்குப்பின்னால் சொல்லப்படுபவை.

31.ரஹ் - இது ரஹ்மதுல்லாஹி அலைஹி என்பதின் சுருக்கமாகும்.இதன் பொருள் அல்லாஹ்வின் அருள் அவர் மீது உண்டாவதாக என்பதாகும்.இது நபித்தோழர்களுக்கு பிறகு வந்த நல்லடியார்களின் பெயர்கள் சொல்லப்படும் பொழுது உபயோகப்படுத்தப்படும்.

32.வஹீ - அறிபவரையும்,அறிவிக்கப்படுபவரையும் தவிர மற்றவர் அறிய முடியாத வண்ணம் விரைவாக செய்தி அறிவிப்பது,இதயத்தில் உதிப்பைத்தோற்றுவிப்பது என்பது பொருளாகும்.இஸ்லாமிய மொழி மரபில் வஹீ என்பது இறைவன் மனிதர்களில் இருந்து யாரை நபியாக தேர்வு செய்கின்றானோ அவருக்கு தன்னுடைய செய்திகளை அறிவிப்பதாகும்.வானவர் மூலம் இறைத்தூதர்களுக்கு இறைவனால் அனுப்பப்படும் இறைச்செய்தி.

33.ஸல் - ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்ற பிரார்த்தனையின் சுருக்கமே இது இறைவனின் கருணையும் அமைதியும் உண்டாவதாக!என்பதே இதன் பொருள்.நாயகம் ஸல் அவர்களின் பெயர் உச்சரிக்கபடும் குறிப்பிடப்படும் போதெல்லாம் இதனை சொல்வது முஸ்லிம்களின் கடமையாகும்.இதனை சலவாத் என்பர்,

34.ஸலாம் - இது அஸ்ஸலாமு அலைக்கும் என்பதை குறிப்பதாகும்.இதன் பொருள் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக என்பதாகும்.இது உலக முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் அளித்துக்கொள்ளும் முகமனும் வாழ்த்தும் ஆகும்.

35.ஸுன்னத் - இதன் பொருள் வழி முறை என்பதாகும்.அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பழக்க வழக்கங்கள் நடைமுறைகள்,மேலும் அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகள் ஆகியவையே ஸுன்னத் ஆகும்.

36ஸுஜூது - இது தலையை தரையில் வைத்துப்பணிதல் என்பதனினைக்குறிக்கும்.இது இறைவனுக்காக மட்டுமே செய்யபட வேண்டுமே அன்றி வேறு எதற்கும் எவருக்கும் செய்யக்கூடாது என்று இஸ்லாம் பணிகின்றது.

37.ஜிப்ரீல்(அலை) - இறைவனுக்கு நெருக்கமான நாண்கு வானவர்களுள் இவரும் ஒருவர்.வானவர்களின் தலைவரும் இவரே.இவர்கள்தான் இறைத்தூதர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) கொண்டு வந்த வானவர்.



Saturday, November 20, 2010

இறைத்தூதர்கள்(சிறு குறிப்பு) - 2

13.ஸுஐபு(அலை): இவர்கள் நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் வழித்தொன்றல்.வடமேற்கு சவூதியாவில் உள்ள மலைபிரதேசமான "மத்யன்"பகுதிக்கும்"அய்கா"என்னும் மற்றுமொரு பகுதிக்கும் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.ஓரிறைக் கொள்கையையும்,வணிகநேர்மையையும் மக்களுக்கு வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார்கள்.

14.மூஸா(அலை) இவர்கள் கி.மு 14ஆம் நூற்றாண்டில் எகிப்தில் பிறந்தனர்.கொடுங்கோலன் இரண்டாம் ரம்சேஸ்(பிர் அவ்ன்)கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இஸ்ராயீல் சமுதாயத்தை மீட்டார்கள்.இவர்களுக்கு அல்லாஹ் "தவ்ராத்" வேதத்தை அருளினான்.

15.ஹாரூன் (அலை):இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களின் சகோதரர்.எகிப்தின் சர்வாதிகாரி இரண்டாம் ரம்சேஸை எதிர்த்துப் போரடுவதில் மூஸா (அலை) அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

16.இல்யாஸ்(அலை): கி மு 8ஆம் நூற்றாண்டு நபி ஹாரூன் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் வந்த ஒரு இறைத்தூதர்.அன்றைய ஷாம் நாட்டு மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.

17.யூனுஸ்(அலை): கி.மு 8ஆம் நூற்றாண்டில் ,இராக்கிலுள்ள "நைனவா" பகுதிக்கு இவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.

18.தாவூத்(அலை): இறைத்தூதர் யஃகூப்(அலை) அவர்களின் வழித்தோன்றல் ஆவார்கள்.இவர்களுக்கு "ஜபூர்" என்னும் வேதத்தை அல்லாஹ் அருளினான்.இவர்கள் பாலஸ்தீன சர்வாதிகாரியான ஜாலூதை வீழ்த்தினார்கள்.

19.சுலைமான்(அலை): இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களின் மைந்தரான இவர்கள் இறைத்தூதராகவும்,பேரரசராகவும்,விளங்கினார்கள்.ஜெரூசலத்திலுள்ள புனித இறை இல்லமான பைத்துல் முகத்தஸை இறைக்கட்டளைக்கு இணங்க புதுப்பித்தார்கள்.ஜின் இனமும்,பறவை இனமும் இவர்களுக்கு வசப்படுத்திக்கொடுக்கப்பட்டிருந்தன.

20.ஜகரிய்யா(அலை): கி.மு முதலாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் இஸ்ரவேலர்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.இறைத்தூதர் தாவூத்(அலை) அவர்களின் வழித்தோன்றலான இவர்கள் அன்னை மர்யமை வளர்த்தார்கள்.இறைத்தூதர் யஹ்யா(அலை) அவர்கள் இவர்களின் புதல்வர் ஆவார்கள்.

21.யஹ்யா(அலை): கி.மு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்கள் ஜக்கரிய்யா(அலை) அவர்களின் புதல்வர்.இவரை இஸ்ரவேலர்கள் படுகொலை செய்தனர்.

22.ஈஸா(அலை): இவர் கி.மு 4ஆம் ஆண்டில் பாலஸ்தீனத்தில் உள்ள நாஸிரா என்னும் ஊரில் மர்யம்(அலை) அவர்களுக்கு ஆண் துணையின்றி அற்புதமான முறையில் பிறந்தார்கள்.இவருக்கு இஞ்ஜீல் வேதம் இறைவனால் அருளப்பட்டது.

23.துல்கிஃப்லு(அலை):இறைத்தூதர்.

24.அல்யஸவு(அலை): இறைத்தூதர்.

25.முஹம்மது(ஸல்): இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 12(கி.பி 570 ஆகஸ்ட் 20) திங்கள்கிழமை திருமக்காவில் பிறந்தார்கள்.இப்புவியில் 63ஆண்டு காலங்கள் வாழ்ந்து ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் 12ஆம் நாள் (கி.பி 632 ஜூன் 7)திங்கள் கிழமை இவ்வுலகை விட்டு மறைந்தார்கள்.



Monday, November 8, 2010

இறைத்தூதர்கள்(சிறு குறிப்பு) - 1

குர்ஆனில் குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்கள்(சிறு குறிப்பு)

1.ஆதம் (அலை):உலகில் முதன்முதலாக படைக்கப்பட்ட மனிதர்.இந்த உலகிற்கு இறைவனால் அனுப்பபட்ட முதல் இறைத்தூதர்.

2.இத்ரீஸ்(அலை):இறைத்தூதர் நூஹ்(அலை)அவர்களின் முப்பாட்டனாரான இவர்கள் இறைத்தூதர் ஆதம் - ஹூத் அவர்களுக்குப்பின்னால் வந்த நபியாவார்.

3.நூஹ்(அலை):ஆதித்தந்தை ஆதம் (அலை) அவர்களுக்குப்பின் வந்த இறைத்தூதர்.இவர்கள் 950ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.இவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயம் மிகப்பிரமாண்டமானது.

4.ஹூத்(அலை):கி.மு 2000 இல் வாழ்ந்த அரபு பழங்குடியின மக்களுக்கு இவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.இப்பழங்குடி மக்கள் யமன் நாட்டில் கடலோரப்பகுதிகளில் வசித்து வந்தனர்.

5.ஸாலிஹ் (அலை):இவர்கள் கி.மு 2430 இல் சவுதிய்யாவிலுள்ள அல்ஹிஜ்ர் என்னும் இடத்தில் வாழ்ந்த இறைத்தூதர்.ஆடம்பர வாழ்வில் மூழ்கி,சிலைவணக்கத்தில் மாய்ந்து போய்க்கொண்டிருந்த "ஸமூத்"கூட்டத்தினரை சீர்படுத்த பாடுபட்டார்கள்.

6.இப்றாஹீம்(அலை):இவர்கள் கி.மு 2000 வாக்கில் தென் இராக்கில் உள்ள "உர்"என்னும் ஊரில் பிறந்த இறைத்தூதர் ஆவார்கள்.இவர்களுக்கு "இறை நம்பிக்கையாளர்களின் தந்தை" எனவும்,"இறைவனின் உற்ற நண்பர்" எனவும் சிறப்பு பெயர்கள் உண்டு.இறை ஆணைப்படி கஃபா ஆலயத்தை தன் மகனோடு சேர்ந்து புனர் நிர்மாணம் செய்தார்கள்.

7.லூத் (அலை):நபி இப்றாஹீம்(அலை)அவர்களின் சகோதரர் மகனான இவர்கள் ஜோர்தானில் உள்ள "ஸத்தூம்"என்னும் பகுதிக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.ஓரினசேர்க்கையை எதிர்த்து பிரச்சாரம் செய்தவர்கள்.

8.இஸ்மாயீல்(அலை): கி.மு 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இறைத்தூதரான இவர்கள் நபி இப்றாஹீம் - ஹாஜரா தம்பதிகளுக்கு மூத்த புதல்வராவார்கள்.இவர்களிடம் இருந்து அரபு சந்ததிகள் தோன்றியதால் "அரபிகளின் தந்தை" என்பர்.

9.இஸ்ஹாக்(அலை): இறைத்தூதரான இவர்கள் நபி இப்றாஹீம் - ஹாஜரா தம்பதிகளின் இளைய புதல்வராவார்கள்.இவரின் மைந்தர்தான் யகூஃப் (அலை) அவர்கள்.எனவேதான் இவர்களை "இஸ்ராயீல்களின் தந்தை"என்று சொல்வர்.

10.யஃகூப்(அலை): கி.மு 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்கள் இறைத்தூதர் இஸ்ஹாக்(அலை) அவர்களின் புதல்வர்.இவர்களுக்கு 12 ஆண் பிள்ளைகள் இருந்தனர்.இந்த 12 பேரின் வழித்தோன்றல்களே இஸ்ராயீல் சமூகத்தினர்.யஃகூப் (அலை) அவர்களின் மற்றுமொரு பெயரே இஸ்ராயீல்.இதனால் இஸ்ரவேலர்களை பனீ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் மக்கள் என்பர்.

11.யூசுப்(அலை): யஃகூப் (அலை) அவர்களின் இளைய புதல்வரான இவர்கள் கி.மு 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் பேரழகுக்கு சொந்தக்காரர்.இவர்கள் எகிப்தின் அமைச்சராகவும்,பின்னர் அரசராகவும் விளங்கினார்கள்.

12.ஐயூப்(அலை): நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் வந்தவர்.நபி யூசுப்(அலை) அவர்களுக்குப்பின் ,தென் பாலஸ்தீனுக்கும் "அல் அகபா"வளைகுடாவுக்கும் மத்தியில் "அத்வம்"பகுதி மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள் என்று சொல்லப்படுகின்றது.இவர்கள் பொறுமைக்கு பெயர் போனவர்கள்.

அரபிப் பதத்தின் விளக்கம் - 2


அரபிப் பதத்தின் விளக்கம் - 2

11.கலிமா - இதன் பொருள் சொல்,வார்த்தை,பேச்சு என்பதாகும்.இஸ்லாத்தின் அடிப்படை தத்துவங்களை கூறும் வசனங்களுக்கு கலிமா என்று கூறப்படுகிறது.'லாயிலாஹா இல்லல்லாஹ் - முஹம்மது ரசூலுல்லாஹ்(வணக்கத்துக்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை-முஹம்மது(ஸல்)அவர்கள் இறைவனின் தூதர்)எனும் இஸ்லாமின் மூலக்கொள்கையை இச்சொல் குறிக்கும்.

12.தயம்மும் - இச்சொல்லுக்கு நாடுதல் என்று பொருள்.உளு செய்வதற்கு நீர் கிடைக்காத பொழுது மண்ணைக்கொண்டு சுத்தி செய்து கொள்ள நாடுவதைக் குறிப்பிட இச்சொல் பயன் படுத்தப்படுகின்றது.'உளு' எனும் அங்கசுத்தி செய்ய நீர் கிடைக்காத சமயத்தில் சுத்தமான மண் உள்ள தரையில் கைகளைப் பதித்து முகம் ,கைகளில் தடவிக்கொள்வது.

13.தவாஃப் - புனித மக்காவில் உள்ள திருகஃபாவை ஏழுதடவை சுற்றி வருவதற்கு தவாஃப் என்று பெயர்.முஸ்லிம்கள் கஃபாவைத் தவிர வேறு எதனையும் சுற்றி வருதல் கூடாது.ஹஜ்ஜிலும்,உம்ராவிலும் இது முக்கிய வழிபாடாகும்.

14.துஆ - இதன் பொருள் இறைஞ்சுதல்,பிரார்தித்தல் என்று பெயர்.அழைப்பு என்பது சொற் பொருளாகும்.

15.நபி - நுபு எனும் மூலச்சொல்லில் இருந்து வந்த இதன் பொருள் உயர்த்தப்பட்டவர் என்பதாகும்.இறைவனிடமிருந்து செய்திகளை 'வஹீ' மூலம் எடுத்துக்கூறும் தூதர்களுக்கு கூறப்படுகின்றது.நபித்துவத்திற்கு 'நுபுவத்'என்று பெயர். எல்லா நபிமார்ளும் இறைவனால் அனுப்பப்பட்டவர்களே. மக்களுக்கு இறை செய்திகளை எடுத்துரைத்து அவர்களுக்கு நேர்வழிக்காட்டுவதற்காக மக்களில் இருந்தே இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே இறைத்தூதர்.

16.பக்கா - இது புனித மக்காவின் பழைய பெயராகும்.

17.மக்கா - இஸ்லாத்தின் புண்ணிய நகராமான இது சவூதி அரேபியாவில் உள்ள ஹிஜாஸ் மாநிலத்தில் செங்கடலில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ளது.இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் இறை ஆணைப்படி இங்கு புனித கஃபாவை நிர்மாணித்தார்கள்.இஸ்லாத்தில் இறுதித்தூதர் முஹம்மத் நபி(ஸல்) இப்புனித பூமியில் அவதரித்தார்கள்.

18.மகாமு இப்ராஹீம் -நபி இப்றாஹீ(அலை) அவர்கள் கஃபாவை நிர்மாணிக்கும் பொழுது ஒரு கல்லில் மீது நின்றுகொண்டிருந்தார்கள்.அதில் அவரது பாதங்கள் இரண்டும் பதிந்திருந்தன.இக்கல் இருந்த இடமே மகாமு இப்றாஹீம்.

19.மத்ரஸா - இதன் பொருள் கல்வி போதிக்கப்படும் இடம் என்பதாகும்.பொதுவாக மார்க்க கல்வி போதிக்கப்படும் கல்லூரிகளை த்ரஸா என்று குறிப்பிடுவர்.

20.மதீனா - இதன் பொருள் பட்டணம்,நகரம் என்பதாகும்.இது சவூதி அரேபியாவில் உள்ள ஹிஜாஸ்மாநிலத்தில் புனித மக்காவிற்கு வடக்கே 320 மைல் தொலைவில் உள்ள இஸ்லத்தின் புண்ணிய நகரங்களுள் ஒன்று.இங்கேதான் அண்ணல் நபி(ஸல்) அவர்களுடைய,அவர்களது தோழர்களுடைய,இன்னும் பலருடைய அடக்கஸ்தலங்கள் உள்ளன.

21.மஸ்ஜித் - சுஜூத் என்னு சொல்லில் இருந்து பிறந்த இதன் பொருள் தொழுமிடம் என்பதாகும்.இந்தியாவில் முதன் முதல் கட்டப்பட்ட மஸ்ஜித் கி.பி 642 -ல் மாலிக் இப்னு தீனாரால் ,கேரளா மாநிலத்திலுள்ள கொடுங்கலூரில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளி வாசலாகும்.ஐவேளைத்தொழுகைகள் நடத்தப்படும் பள்ளிவாசல்..உலகில் இறைவனை தொழுவதற்காக நிர்மாணிக்கப்பட்ட முதல் தொழுமிடம் புனித 'கஃபா'இஸ்லாமியர் எங்கெங்கு இருந்தார்களோ அங்கங்கு எல்லாம் தொழுமிடங்களை எழுப்பினார்கள்.

22.மஹர் - இஸ்லாமிய சட்டத்தின் படி மணமகன் தான் முடிக்கும் பெண்ணுக்கு கொடுக்கும் திருமணக்கட்டணத்திற்கு இப்பெயர் வழங்கப்படுகின்றது.இதைப்பற்றி அல்குர் ஆனில் "நீங்கள் திருமணம் செய்துகொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்.அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் மனமார உங்களுக்கு விட்டுத்தந்தால் அதனை நீங்கள் தாரளமாக மகிழ்வுடன் புசியுங்கள்."(4:4)என்று இறைவன் கூறுகின்றான்.இதை முஸ்லிம் மணமகன்,மணமகளுக்கு கட்டாயம் செலுத்த வேண்டிய விவாக கட்டணம் என்றும் சொல்லலாம்.
இன்னும் வரும்.

Sunday, November 7, 2010

அரபிப் பதத்தின் விளக்கம் - 1

உலகில் வாழும் அரபி அல்லாத முஸ்லிம்கள் அரபுச்சொற்களை மிக அதிகளவில் உபயோகிக்கின்றனர்.அவற்றுக்கான தமிழ் விளக்கம்.

1.அன்ஸாரிகள் - அன்ஸார் என்பதற்கு உதவியாளர்கள் என்று பொருள்.யமன் நாட்டிலிருந்து மஃரிப் நீர்தேக்கத்தில் கி.பி 542 - 57 இல் உடைப்பு ஏற்பட்ட பொழுது அங்கிருந்து வந்து குடியேறிய அவ்ஸ்.கஜ்ரஜ் ஆகிய இரு பெரும் குலத்தோரே பின்பு அன்ஸாரிகளானார்கள்.மக்காவைத்துறந்து புனித மதீனாவுக்கு வந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை அகமும்,புறமும்மலர வரவேற்ற ஆதரவாளர்கள் அன்ஸாரிகள்.மதீனா வாசிகள் அன்று போல் இன்றும் பண்பாட்டின் சின்னமாக விளங்குகின்றனர்.

2.அரபி - இன்று அரபி மொழி உலகில் பல்வேறு பகுதிகளில் பேசப்படும் மொழிகளில் ஆங்கிலம்,ஸ்பானிஷ் மொழிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப்பெற்றுத் திகழ்கின்றது.உலக மொழி ஆய்வினர் அரபியே உலகின் முதன் மொழி என்று கூறுகின்றனர்.உலகப்பொதுமறை திருகுர் ஆன் இறக்கப்பட்ட மொழி அரபி மொழியே ஆகும்.அரப் என்ற பதத்திற்கு உற்சாகம்,தெளிவான பேச்சு,வெளிப்படையான மொழி எனப் பல பெயர்கள் உண்டு.

3.அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன்.இது தூய அல்லாஹ் ஒருவனுக்கே பொருத்தமானது.அல்லாஹ்வின் அழகிய திரு நாமங்களில் ஒன்று.

4.அலை - அலைஹிஸ்ஸலாம் என்பதின் சுருக்கமே அலை.இதன் பொருள் அவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும் என்பதாகும்.இஸ்லாமிய வழக்கில் பெரும்பாலும் நபிமார்களின் பெயர்களை சொல்லப்பட்டவுடன் கூறப்படுவதாகும்.சில சமயம் தூதரல்லாத முன் சென்ற சில நல்லடியார்களுக்கும் சொல்லப்படும்.உதாரணம்:மர்யம்(அலை),லுக்மான்(அலை)

5.இன்ஷா அல்லாஹ் - இவ்வார்த்தைகளின் பொருள் 'அல்லாஹ் நாடினால்' என்பதாகும்.ஒருவர் ஒரு வாக்குறுதியை அது எத்தனை சிறியதாயினும் அதனை அளிக்கும் முன் 'இன்ஷா அல்லாஹ்'கூறின் அவர் அவ்வாக்குறுதியை மனப்பூர்வமாக நிறை வேற்ற கடமைப்பட்டுள்ளார்.

6.இஸ்லாம் - ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து,இறைவன் மனித உற்பத்தியை தொடங்கினான்.மனித குலத்தை நேர்வழிப்படுத்த இறைத்தூதர்களை மனிதர்கள் இடையே அனுப்பி வைத்தான்.எல்லாத்தூதர்களும் ஓரிறைக்கொள்கையை மட்டுமே போதித்தனர்.இந்த ஒரிறைக்கொள்கையின் மார்க்கமே இஸ்லாம்.'இஸ்லாம்'என்ற சொல்லுக்கு (அல்லாஹ்வுக்கு)அடி பணிதல் என்றும்,'முஸ்லிம்' என்ற சொல்லுக்கு (அல்லாஹ்வுக்கு)அடிபணிபவர் என்றும் பொருளாகும்.இறுதித்தூதர் எடுத்துரைத்த ஏக இறை மார்க்கத்தை கடைபிடிப்பதே இஸ்லாமாகும்.

7.இப்லீஸ் - இச்சொல்லுக்கு நிராசையுறுதல் என்று பொருள்.இறைவனின் பேரருளை விட்டும் இப்லீஸ்(ஷைத்தான்)நிராசையுற்று விட்டதால் அவனுக்கு இப்பெயர் ஏற்பட்டது.மனிதனை வழிகெடுப்பதே இவனின் குறிகோளும்,வேலையுமாகும்.இவன் நெருப்பால் படைக்கப்பட்ட ஜின் இனத்தை சேர்ந்தவன் ஆவான்.இறை கட்டளையை ஏற்க மறுத்த காரணத்தினால் இறைவனின் கருணையில் இருந்து நீக்கப்பட்டான்.

8.உம்ரா - நாடுதல்,சந்தித்தல்,வழிபடுதல் என்று பொருளாகும்.கஃபாவுக்கு செல்வது இரு வகைப்படும்.1.ஹஜ் 2.உம்ரா. உம்ராவுக்கு ஹஜ்ஜின் அத்தனை நிபந்தனைகளும் உள்ளன.ஆனால் ஹஜ்ஜை குறிப்பிட்ட காலம் வரைதான் நிறைவேற்ற இயலும்.ஆனால் உம்ராவை எக்காலத்திலும் நிறைவேற்றலாம்.புனித கஃபாவை தரிசித்து இறைவனை வழிபடும் ஒரு வழிபாடு எனவும் பொருள் கொள்ளலாம்.

9.உளூ - தொழுவதற்காக தண்ணீரால் உடலைத் தூய்மை செய்து கொள்வதற்கு 'உளு'எனக்கூறப்படுகின்றது.தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்னால் முகம்,வாய்,மூக்கு,தலை,காது,கால் முதலியவற்றை நபிகளாரின் வழிமுறைகளுக்குட்பட்டு,தூய்மைப்படுத்திக்கொள்ளும் அங்கசுத்தி முறையாகும்.

10.கஃபா - மக்காவில் உள்ள இறை இல்லத்திற்கு கஃபா என கூறப்படுகின்றது.இதன் முழுப்பெயர் கஃபதுல்லாஹ் எனப்படும்.இறைத்தூதர் இப்றாஹீம்(அலை) அவர்களாலும்,அவர்களது திருமகனார் இஸ்மாயீல் (அலை)அவர்களாளும் மக்காவில் எழுப்பப்பட்ட முதல் இறை ஆலயம்.இஸ்லாத்தில் கஃபா சிறப்பான இடத்தை வகிக்கின்றது.உலகில் உள்ள முஸ்லிம்கள் அதனை முன்னோக்கியே இறைவனைத்தொழுகின்றனர்.ஹஜ் கடமை இங்குதான் நிறை வேற்றப்படுகின்றது.இதற்கு 'மஸ்ஜிதுல் ஹராம்' புனித மிக்க பள்ளிவாசல் என்றும் பெயருண்டு.

இன்னும் வரும்.



3 நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கலாகாது.


உம்முஹாத்துல் முஃமினீன் அன்னை உம்மு ஹபீபா(ரலி)அவர்களின் தந்தை அபு சுப்யான் மரணமடைந்த மூன்றாம் நாள் உம்முஹபீபா(ரலி)அவர்கள் நறுமணத்தை வரவழைத்துப்பூசிக்கொண்டார்கள்.தந்தை இறந்த மூன்றாம் நாளே நறுமணம் பூசி சந்தோஷம் சந்தோஷம் கொண்டாடுகின்றாரே என்று அதனைக்கண்டவர்களுக்கு எல்லாம் வியப்பு.காரணம் கேட்ட பொழுது இவ்வாறு விளக்கம் கூறினார்கள்
"எனக்கு நறுமணம் பூசிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் நான் நறுமணத்தை பூசிக்கொள்ள வில்லை.ஒரு பெண்ணுக்கு தன் கணவன் தவிர வேறு எவருக்காகவும் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்க அனுமதி இல்லை என்ற நாயக வாக்கை மெய்பிப்பதற்காக அதனை அனுசரித்து நான் நறுமணம் பூசி,மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கவில்லை என்று காட்ட இவ்வாறு செய்தேன்"என்று கூறினர்.



Friday, October 29, 2010

ஜமராத்



மினா என்னும் இடத்திலுள்ள குறிப்பிட்ட மூன்று இடங்களுக்கு ஜமராத் எனப்படும்.இம்மூன்று இடங்களும் ஒன்றுக்கொன்று சுமார் அரை பர்லாங் இடை வெளியில் உள்ளன.

நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் தங்கள் தவப்புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வின் ஆணைப்படி இறைவனுக்காக பலியிட அழைத்துச் சென்ற போது இப்லீஸ் நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் முன் தோன்றி அவர்களின் அந்த தியாகத்தை முறியடிக்க முயன்றான்.அவனை அறிந்து கொண்ட இப்றாஹீம் (அலை)அவர்கள் இப்லீஸ் மீது கல்லெறிந்து அவனை விரட்டினார்கள்.அதன் காரணமாக அம்மூன்று இடங்களிலும் கல் எறிவது வாஜிப் ஆக்கப்பட்டுள்ளது.

மினாவின் கூடாரங்களில் இருந்து போனால் முதலில் வருவது ஜம்ரத்துல் ஊலா என்றும்,அடுத்து வருவது ஜம்ரத்துல் உஸ்தா என்றும்,கடைசியில் உள்ளது ஜம்ரத்துல் அக்பர் என்றும் பெயர் சொல்லப்படுகின்றது.இவற்றை முறையே சிறிய ஷைத்தான்,நடு ஷைத்தான்,பெரிய ஷைத்தான் என்றும் மக்கள் கூறுகின்றனர்.

ஹாஜிகள் கல்லெறியும் போது சில சமயம் நெரிச்சலில் சிக்கி சிலர் இறந்தும் போவார்கள்.இதற்கு காரணம் என்னவென்றால் கல்லெறியுமிடம் சுமார் இருபது அடி அகலத்தில் முற்றிலும் சுவர் எழுப்பப்பட்டு ஒரு தூண் நடுவில் அமைக்கப்பட்டிருந்தது.

இப்பொழுது மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது.பல லட்சம் மக்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் இந்த இடத்தில் ஒன்று கூடுவதால் நெரிச்சல் ஏற்படுகின்றது.எனவே மிகவும் கவனமாக கல்லெறிய வேண்டும்.

இப்பொழுது சவுதி அரசாங்கம் அவ்விடத்தில் இரண்டடுக்கு மேம்பாலங்கள் கட்டி போவதும்,வருவதும் ஒரு வழிப்பாதையாக ஆக்கி வசதிகளை அமைத்துத்தந்துள்ளது.இதனால் ஹாஜிகள் இப்போதெல்லாம் நெரிசலும்,சிரமமும் இல்லாமல் போய் கல்லெறிந்து வருகின்றனர்.



Wednesday, October 13, 2010

அல் குர்ஆனின் அழகிய திருநாமங்கள்



பேரற்புதம் வாய்ந்த எதற்கும் நிகரில்லாத திருக்குர்ஆனுக்கு அல்லாஹ் குர் ஆனிலேயே பல இடங்களில் பல்வேறு பெயர்களைக் குறிப்பிட்டுள்ளான்.ஒவ்வொரு பெயரும் திருகுர் ஆனின் சிறப்புத்தன்மையை தெரிவிப்பதாக அமைந்துள்ளது.ஒரு பொருளுக்கு அதிகமான பெயர்கள் இருப்பது அதனுடைய சிறப்பையும்,உயர்வையும் காட்டக்கூடியது என்பது திண்ணம்.

1.அல் கிதாப் - வேதநூல்

2.அல் பயான் - தெளிவுரை

3.அல் புர்ஃகான் - நன்மையையும் தீமையையும் பிரித்தறிவிப்பது

4.அல் புர்ஹான் - தெளிவான அத்தாட்சி

5.அத் திக்ரு - நினைவுறுத்துவது

6அந் நூர் - ஒளி

7.அல் ஹக்கு - சத்தியமானது

8.அல் கரீம் - கண்ணியத்திற்குறியது

9.அல் முபீன் - தெளிவுபடுத்தக்கூடியது

10.அல் ஹகீம் - ஞானம் நிறைந்தது

11.அல் அஜீஸ் - மதிப்பிற்குறியது

12.அல் ஹுதா - நேர்வழி

13.அர் ரஹ்மத் - அருள்

14.அஷ் ஷிபா - நிவாரணமளிப்பது

15.அல் மவ்இளத் - நல்லுபதேசம்

16.அல் ஹிக்மத் - ஞானம்

17.அல் முஹைமின் - பாதுகாவலாக இருப்பது

18.அல் கய்யிம் - உறுதியானது

19.அந் நிஃமத் - அருட்கொடை

20.அர் ரூஹ் - உயிருள்ளது

21.அத் தன்ஜீல் - இறக்கிவைக்கப்பட்டது

22.அல் ஹுக்மு - சட்டம்

23.அல் முபாரக் - புனிதமாக்கப்பட்டது

24.அல் முஸத்திக் - உண்மையாக்கி வைக்கக்கூடியது

25.அல் பஷீர் - நற்செய்தி கூறுவது

26.அந் நதீர் - அச்சுறுத்தி எச்சரிப்பது.

27.அல் முதஹ்ஹரா - பரிசுத்தமாக்கப்பட்டது

28.அல் முகர்ரமா - சங்கைக்குறியது

29.அல் மஜீத் - மேன்மைக்குறியது

30.அல் அரபிய்யு - அரபி மொழியுடையது

31.அல் மர்ஃபூஆ - உயர்வானது

32.அல் அஜப் - ஆச்சரியமானது

33.அல் பஸாயிர் - ஆதாரமுள்ளது

34.அத் திக்ரா - நினவூட்டும் உபதேசம்

35.ஹப்லுல்லாஹ் - அல்லாஹ்வின் கயிறு






Sunday, October 10, 2010

முஸ்தலிஃபா


முஸ்தலிஃபா என்பது மினாவுக்கும்,அரஃபாத்துக்கும் இடையில் உள்ள ஒரு இடமாகும்.இந்த இடத்தைப்பற்றி அல்லாஹ் அல் குர் ஆனில் கூறுகின்றான்."நீங்கள் அரஃபாவிலிருந்து திரும்பினால் 'மஷ் அருல் ஹராம்'என்னுமிடத்தில் அல்லாஹவை திக்ரு செய்யுங்கள்"(2:198) என்று.இங்கு குர் ஆனில் சொல்லப்பட்ட இடம் முஸ்தலிஃபா ஆகும்.

துல் ஹஜ் மாதம் 9,10 ஆவது நாள்களுக்கு இடையே உள்ள இரவில் ஹாஜிகள் இங்கே தங்க வேண்டும்.அதைத்தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.முஸ்தலிஃபாவில் உள்ள பள்ளிவாசலுக்கு பெயர்தான் 'மஸ்ஜிதுல் ஹராம்' என்பதாகும்.இந்த பள் ளியில் தொழுவது சிறப்புக்குறிய காரியமாகும்.இங்கேயும்,முஸ்தலிஃபா ,மைதானத்திலும் துஆ ஒப்புக்கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.

நபி (ஸல்)அவர்கள் ஹஜ் செய்த பொழுது துல்ஹஜ் பிறை 9ஆம் நாள் சூரியன் மறைந்த பிறகு அரஃபாவிலிருந்து புறப்பட்டு,இரவானதும் முஸ்தலிஃபா வந்து சேர்ந்தார்கள்.இங்கு மஃரிப்,இஷா தொழுகை இரண்டையும் ஒரு பாங்கு,ஒரு இகாமத் சொல்லித்தொழுதார்கள்.இரண்டுக்குமிடையிலோ,அதற்கு பின்போ யாதொரு நபில் தொழுகையும் தொழுகவில்லை.சுபுஹு தொழுகையை விரைவாக தொழுது விட்டு தல்பியா ஓதியவாறு மினாவுக்குப்புறப்பட்டனர்.அப்போது கல்லெறிவதற்காக நபி(ஸல்)அவர்கள் கேட்டதன் படி இபுனு அப்பாஸ்(ரலி) அவர்கள் பொடிக்கற்களைப் பொறுக்கிக்கொடுத்தனர்.

இதன் படி அங்கே ஹாஜிகள் 70 பொடிக் கற்களைப் பொறுக்கிக்கொள்ள வேண்டும்.பாலைவனம் நிறைந்த அந்த நாட்டில் முஸ்தலிஃபாவில் மட்டும் எங்கு பார்த்தாலும் பொடிக்கற்களாவே தென் படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஹாஜிகள் கல் பொறுக்குகின்றனர்.கல் பற்றாக்குறை வருவதே இல்லை.இது அல்லாஹ்வின் அற்புதமாக உள்ளது.இந்த இடம் துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதில் விஷேஷ அந்தஸ்த்தைப்பெறுகின்றது.

முஸ்தலிஃபாவில் தங்கிய ஹாஜிகள் அனைவரும் மினாவை நோக்கி நகர்ந்து செல்வர்,அப்போது ஒரே மைதானத்தில் ஹாஜிகள் அனைவரையும் பார்க்கும் பொழுது மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு முன்னால் எல்லா மனிதர்களும் நிறுத்தப்படும் காட்சி நினைவுக்கு வரும்.

ஒளி,ஒலிக்காட்சிகளைக்காண இங்கு கிளிக் செய்யுங்கள்

Thursday, October 7, 2010

அரஃபா

அரஃபா

இது மக்காவிற்கு கிழக்கே 12 கல் தொலைவில் உள்ள மலையாகும்.அதைச்சுற்றியுள்ள மைதானத்திற்கு சொல்லப்படும் பெயர் அரஃபா ஆகும்.அரஃபா என்றால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளுதல் என்று பொருள்.

அல்லாஹ் விண்ணகத்திலிருந்து ஆதம் (அலை) அவர்களையும்,ஹவ்வா (அலை)அவர்களையும் பூமிக்கு இறக்கினான்.பிறகு இருவரும் அழுது பாவ மன்னிப்புத்தேடிய பின் இருவரையும் இங்கேதான் சந்திக்க வைத்தான்.இங்கே தான் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டனர்.அதனால் இதற்கு அரஃபா(அறிந்து கொண்ட இடம்) என்னும் பெயர் வந்தது.

அரஃபா மைதானம் சுமார் 8 மைல் நீளமும்,4 மைல் அகலமும் கொண்டதாகும்.இங்கே ஜபலே ரஹ்மத்(அருளின் மலை)என்று ஒரு மலையும் உண்டு.இந்த இடத்தில் வைத்து ஆதம்,ஹவ்வா(அலை) இருவர் மீதும் இரக்கம் காட்டி பாவங்களை மன்னித்து ஒன்று சேர்த்ததால் அப்பெயர் வந்தது.இந்த மலை சுமார் 200 அடி உயரம் இருக்கும்.இதன் மீது ஏறிச்செல்ல படிகள் உள்ளன.இதன் உச்சியின் மீது ஏறி நின்றுதான் நபி(ஸல்) அவர்கள் இறுதிப் பேருரை நிகழ்த்தினார்கள்.

அர்ஃபா மைதானத்தில் ஹாஜிகள் துல்ஹஜ் பிறை 9 இல் மாலை வரைத்தங்க வேண்டும்.இது ஹஜ்ஜின் முக்கிய கடமை(பர்ளு) ஆகும்.எவரேனும் சிறிது நேரமாவது இங்கு தங்கவில்லை என்றால் ஹஜ் முழுமை பெறாது.

இங்கு வைத்து கேட்கப்படும் பிரார்த்தனை உடனே அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நபி(ஸல்;) அவர்கள் கூறி உள்ளனர்.அவர்களும் இங்கே அழுது துஆ செய்து இருக்கின்றனர்.அதனால் மக்கள் கண்ணீர் விட்டு அழுது இங்கு அந்நாளில் துஆ செய்யும் காட்சி உள்ளத்தை உருக்குவதாக இருக்கும்.

மாலையானதும் மஃரிபு தொழாமல் முஸ்தலிஃபா சென்று ஹாஜிகள் மஃரிப்,இஷாவையும் சேர்த்து தொழுவர்.அர்ஃபாத்தில் தங்கும் நாளை அரஃபா நாள் என்பர்."இந்த அரஃபா நாளை விட எந்த நாளிலும் அல்லாஹ் தன் அடியார்களை நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை.மேலும் அல்லாஹ் மிகவும் அண்மையில் வந்திறங்கி வானவர்களிடம் ஹஜ்ஜு செய்பவர்களைப்பற்றி பெருமை பாராட்டி பேசுகிறான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அரஃபா நாள் வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அதற்கு ஹஜ்ஜுல் அக்பர் என்று சொல்லப்படும்.அது 70 ஹஜ்ஜுகளுக்கு சமமாகும் என்பது நாயக வாக்கு.

இங்கே மஸ்ஜிதுன் நமிரா என்ற பிரம்மாண்டமான பள்ளிவாசல் உள்ளது.அன்று லுஹரையும்,அஸரையும் சேர்த்து லுஹர் நேரத்திலேயே இமாம் தொழ வைப்பார்.பல லட்சம் மக்கள் அவர் பின்னால் நின்று தொழுவார்கள்.

ஒலி,ஒளிக்காட்சிகளை இங்கு காணுங்கள்.

Wednesday, October 6, 2010

மினா





மினா


மக்காவிற்கு ஐந்துமைல் தூரத்தில் அரபாத் செல்லும் வழியில் உள்ள ஒரு ஊருக்குப்பெயர்தான் மினாவாகும்.மினா என்றால் விருப்பம் என்று பொருளாகும்.இங்குதான் ஆதம் நபி(அலை) அவர்கல் சுவனம் மீள் விரும்பியதன் காரணமாக இவ்விடத்திற்கு இந்தப்பெயர் ஏற்ப்பட்டது என்று கூறப்படுகின்றது.

இங்கே இரண்டு நீளமான தெருக்கள் உள்ளன.அவற்றில் பெரும்பாலும் கட்டிடங்கள் உள்ளன.எனினும் பெரும்பாலும் அவை காலியாகவே இருக்கும்.ஹஜ் காலங்களில் மட்டும் வாடைகைக்கு விடப்படும்.

மேலும் நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து சுமார் 1400 ஆண்டுகளாக அந்த இடம் ஹஜ் கடமையை நிறை வேற்றுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.எனவே ,இங்கே வீடு,கடைகள் போன்ற எந்த கட்டிடங்களும் கட்டக்கூடாது என்று சவுதி அரசாங்கம் தடை விதித்துள்ளது.ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்தில் தங்கித்தான் ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள்.இங்கு துல்ஹஜ் பிறை8 ,மற்றும் 10,11,12,அகிய நாண்கு நாட்கள் ஹாஜிகள் தங்கி இருப்பது அவசியமாகும்.

சுமார் 30 லட்சம் ஹாஜிகள் கூடாரமடித்துத் தங்கக்கூடிய அளவு வசதி உள்ள பிரமாண்டமான மைதானம் இங்கே உள்ளது.சவுதி அரசாங்கம் தீ பிடிக்காத குளிர்சாதனவசதி உள்ள சுமார் 30 லட்சம் ஹாஜிகளுக்கு தேவையான கூடாரங்களை தண்ணீர் வசதியுடன் ஏற்படுத்தித்தந்திருக்கின்றது.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் மகன்இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப்பலியிட முயற்சித்த இடமும் இதுதான்.எனவே ஹாஜிகள் இங்கே குர்பானி கொடுக்க வேண்டும்.மேலும் ஹாஜிகள் ஷைத்தானுக்கு கல் எறியும் ஜம்ரா என்ற இடங்களும் இங்குதான் உண்டு.இங்கு மஸ்ஜிதுன் கைப் என்ற பள்ளிவாசலும் உண்டு.இங்கு ஆதம்(அலை) அவர்களும் மற்ற எழுபது நபிமார்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் அந்தப்பள்ளியில் தங்குவது விஷேஷமானது என்றும் கூறப்படுகின்றது.

மேலும் மினா துஆ ஒப்புக்கொள்ளப்படும் இடமாகவும் இருக்கிறது.ஹாஜிகள் ,இங்கே அதிகமாக வணக்கங்களில் ஈடு படவேண்டும்.ஹஜ்ஜுடைய ஐந்து நாட்களைத்தவிர வருடத்தின் மற்ற நாட்களில் காலியாகவே இருக்கும்.